ரஃபி சாஹிப்




பத்து வயதில் தன் பகுதிக்கு அடிக்கடி வந்த ஃபகீரின் பாடல்களில் மெய் மறக்கும் ரஃபி அவரிடம் கஸலை பாடிக்காட்டுகிறார்.அந்த சிறுவனின் ஆர்வத்தை பார்க்கும் ஃபகீர் அவரை ஆசிர்வதிக்கிறார்.1940 களின் மத்தியிலிருந்து 1980 வரை ஹிந்தி திரைப்பட உலகின் பிரதான பின்னணி பாடகராக இருந்த முகமது ரஃபி பற்றி அவரின் மருமகள் யாஸ்மின் காலித் ரஃபி எழுதியுள்ள நினைவுக்குறிப்பு ரஃபி பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கிறது.அவரின் மருமகள் என்பதால் வெறும் புகழ்மாலையாக மட்டும் இந்த நூல் இல்லை.

1940களில் லாகூரிலிருந்து தன் உறவினருடன் பம்பாயில் திரையுலகில் பாடுவதற்கு வருகிறார் ரஃபி.அங்கு பட வாய்ப்புகளுக்காக அலைகிறார்.அவர் வாடகைக்கு தங்கியிருந்த சிராஜூதின் அகமதுவின் மூலமாக நவ்ஷத் அலியிடம் பாடும் வாய்ப்பை பெறுகிறார்.1947யில் ஜுக்னு திரைப்படத்தில் நூர்ஜகானுடன் இணைந்து பிரோஸ் நிஜாமியின் இசையில் பாடும் பாடல் மூலமாக அவரின் திரையுலக பயணம் துவங்குகிறது.அதே ஆண்டில் இந்திய சுதந்திரத்தை முன்னிட்டு செங்கோட்டையில் அவருக்கும் பாட வாய்ப்பு கிடைக்கிறது.முதலில் மூன்று நிமிடங்கள் மட்டுமே பாட கிடைக்கையில் மக்கள் மிகவும் விரும்பவே அரைமணி நேரம் பாடகிறார்.நேரு அவரை மிகவும் பாராட்டி அவரை அரவனைத்துக்  கொள்கிறார்.அதன்பின் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கிறது.

1969யில் ஆராதணா திரைப்படம் வெளியாகிறது.ராஜேஷ் கண்ணா இளைஞர்களின் அக உலகில் நுழைகிறார்.இளைஞர்களின் உடல் மொழியை மாற்றுகிறார்.அந்தப் படத்தின் அநேக பாடல்களை கிஷோர் குமார் பாடகிறார்.அந்த கட்டத்திலிருந்து 1970களின் மத்தியில் ராஜேஷ் கண்ணாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து குறையத் துவங்கும் வரை கிஷோர் குமார் நிறைய பாடல்களை பாடுகிறார்.அதன் பின் முகமது ரஃபிக்கு அதிக பட வாய்ப்புகள் அவரது மரணம் வரை வருகிறது.லக்‌ஷமிகாந்த் பியாரிலாலின் முதல் பாடலை அவர் பாடகிறார்.

உலகம் முழுவதும் பல இசைவிழாக்களை நடத்துகிறார்.கொளும்புவில் அவரின் இசைவிழாவிற்கு பத்து லட்சத்திற்கும் அதிக கூட்டம் வருகிறது.ஹிந்தி தெரியாத அந்தக் கூட்டம் அவரின் பாடல்களில் பித்து கொள்கிறது.அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுகிறது.இதனால் தன் திரைப்பட வாய்ப்புகள் பிறருக்கு போவதை பற்றியும் அவர் கவலை கொள்வதில்லை.

கார்கள் மீது அதீத நாட்டம் அவருக்கு இருந்திருக்கிறது.லண்டனில் தன் பிள்ளைகளுடன் சென்று தங்கிய ரஃபி அங்கு கார்களுக்கு ஈடப்படும் அடர் வண்ண நிறங்களை பம்பாயில் தன் பியட் காருக்கு ஈட்டு மகிழச்சி கொள்கிறார்.ஒரு முறை தன் காருக்கு அடர் பச்சை நிறத்தை தீட்டுகிறார்.

உணவுகள் மீது அவருக்கு நிறைய ஈடுபாடு இருந்திருக்கிறது.ஒரு முறை இங்கிலாந்தில் இசை நிகழ்வுகளுக்கு சென்றிருந்த போது அங்கு அவருக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு நல்ல உணவு கிடைக்கவில்லை.தன் மகனிடம் லண்டன் சென்று வர எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்கிறார்.ஆறு மணிநேரம் ஆகும் என்றாலும் அங்கு சென்று தன் மருமகள் யாஸ்மினை சமைக்கச் சொல்லி நன்கு உணவருந்தி சரியான நேரத்திற்கு இசை நிகழ்வுக்கு திரும்பி விடுகிறார்.

அவருடைய பிள்ளைகள் எவரையும் அவர் பாடகராக ஊக்குவிக்கவில்லை.அதற்கு அவர் அளித்த காரணம் காலித்தும் மகள் நஸ்ரினும் நன்றாக பாடுகிறார்கள்.ஆனால் ஒரு வேளை அவர்கள் நன்றாக வளர முடியவில்லை என்றால் அது பெரிய துயரமாக எஞ்சிவிடும் என்கிறார்.அவரின் மரணத்திற்கு பிறகு அவரின் இளைய மகன் பாடராக முயன்று தோற்கிறார்.

பம்பாயில் அவர் தொடர்ந்து வீடு மாறுபவராக இருக்கிறார்.அதற்கு எந்த குறிப்பிட்ட காரணத்தையும் அவரால் கொடுக்க முடியவில்லை.இறுதியாக ரஃபி வில்லாவில் குடிபுகுகிறார்.அங்கு மரணமடைகிறார்.அவர் தன் வீட்டு உறுப்பினர்கள் யாரும் தன் பாடல் ஒலிப்பதிவின் போது ஒலிப்பதிவு கூடத்திற்கு வரக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.குடி,சிகரெட்,கேளிக்கை கூடல்கள் எதிலும் ஆர்வமற்றவராக இருக்கிறார்.கூச்ச சுபாவத்தாலும் , வாக்கியங்களை ஒழுங்காக அமைத்து பேச இயலாததாலும் பெரும்பாலும் நேர்காணல்களை தவிர்க்கிறார்.

அவர் உலகின் அனைத்து இடங்களிலும் தன் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும் தன் சொந்த மண்ணில் நிகழ்ச்சி நடத்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.1962யில் ஒரு முறை வாய்ப்பு கிடைத்து சீனப்போர் துவங்கிதால் அது பறி போய்விடுகிறது.அதன் பின் அப்படி ஒரு சாத்தியம் அவருக்கு நிகழவே இல்லை.

தான் வாடகைக்கு தங்கிய சிராஜூதின் அகமதுவின் மகள் பில்கியூஸை திருமணம் செய்து கொள்கிறார்.அதற்கு முன் அவர் செய்த திருமணம் மிக விரைவில் முடிந்து விடுகிறது.அவரின் மூத்த மகன் சயீத் முதல் திருமணத்தில் பிறந்தவர்.

இந்த நினைவு குறிப்பை எழுதியுள்ள யாஸ்மின் மத்திய பிரதேசத்தில் இந்தூரில் மிக வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.ரஃபியின் பாடல்களை கேட்டு ரசித்தவர் அவரின் வீட்டிற்கே மருமகளாக செல்கிறார்.அவரின் எண்ணங்களை மிக கூர்மையாக பதிவு செய்திருக்கிறார்.லதா மங்கேஷ்கருக்கும் ரஃபிக்கும் ராயல்டி பற்றிய விவாதத்தால்  மனஸ்தாபம் ஏற்பட்டு சில வருடங்கள் இணைந்து பாடாமல் இருக்கின்றனர்.தயாரிப்பாளர் பாடுவதற்கான தொகையை அளித்து விடுவதால் மேற்கொண்டு எதையும் தர வேண்டியதில்லை என்பது ரஃபியின் வாதம்.தயாரிப்பாளர் அந்த பாடலை கொண்டு தொடர்ந்து பணம் ஈட்டுவதால் ராயல்டி தருவதுதான் சரி என்பது லதா மங்கேஷ்கரின் வாதம்.மிகவும் பிந்தி லதா மங்கேஷ்கரின் வாதத்தில் நியாயம் உள்ளது என்பதை உணர்கிறார்.இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதையும்.

1980யில் மாரடைப்பில் இறக்கிறார்.அதன்பின் தன் குடும்பத்தில் துர்மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன என்கிறார் யாஸ்மின்.1990யில் ரஃபியின் இளைய மகனும் தன் சகோதரியின் கணவருமான ஹமிது மாரடைப்பில் இறக்கிறார்.மூத்த மகன் சயீத் 1998யில் கார் விபத்து ஒன்றில் இறக்கிறார்.2005யில் யாஸ்மினின் கணவர் காலித் மாரடைப்பில் இறக்கிறார்.மாரடைப்பு ரஃபியின் குடும்பத்தில் தொடர்ந்து வந்த நோய்கூறு என்கிறார் யாஸ்மின்.

லாகூரில் பிறந்த ரஃபி 1947க்கு பிறகு இந்தியாவிலேயே தங்க முடிவு எடுக்கிறார்.ஆனால் அவரின் சகோதர்கள் ,தந்தை,தாய் எல்லோரும் லாகூரில் வசித்தனர்.எத்தனை எத்தனை குடும்பங்கள் இந்த பிரிவினையால் பாதிக்கப்பட்டிருக்கும்.

வளர்ந்து வந்த பாடகரான ரஃபியிடம்  பாடும் போது முக பாவங்களை உருவாக்கிக்கொள்ளாதே என்று அறிவரை வழங்குகிறார் நூர்ஜகான்.அதை ரஃபி கடைபிடிக்கவும் செய்கிறார்.இங்கிலாந்தில் நடந்த இசை நிகழ்வை பற்றி சொல்லும் யாஸ்மின் அதுவரை இருந்த ரஃபி அல்ல மேடையில் பாடியது.அவர் வேறு யாரோவாக இருந்தார்.பாடி முடித்து கீழே வந்ததும் எளிய மனிதராக கூச்சம் நிரம்பியவராக மென்மையானவராக மாறிவிட்டார் என்கிறார்.

Mohammed Rafi MY ABBA - A MEMOIR

Yasmin Khalid Rafi - Tranquebar

Translated by Rupa Srikumar and A.K.Srikumar.


கதெ





இமையத்தின் எங் கதெ விநாயகத்துக்கும் கமலாவுக்குமான காதலை பற்றிய நெடுங்கதை.கமலா இரண்டு பெண் குழந்தைகளின் தாய்.கணவனை இழந்தவள்.கணவனை இழந்தபின் விநாயகத்தின் ஊரில் கிளார்க் வேலை பெற்று வருகிறாள்.கமலாவும் விநாயகமும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகிறார்கள்.காதலிக்கிறார்கள்.பேசுகிறார்கள்.முப்பத்து மூன்று வயதான விநாயகம் நாற்பத்தி மூன்று வயது வரை கமலாவுடனான பித்தேறிய காதலில் வாழ்வை கழிக்கிறான்.சட்டென்று அந்த உறவு இறுதியில் முறிகிறது.விநாயகத்தின் ஊரில் அனைவரும் விநாயகத்தை எச்சரிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள்,கெஞ்சுகிறார்கள்.ஆனால் விநாயகம் சுழலில் சிக்கியவன்.அவன் அதிலிருந்து மீள இயலாமல் தன்னை இழக்கிறான்.திருமணம் செய்து கொள்ளச்சொல்லி பெற்றோரும் தங்கைகளும் கெஞ்சுகிறார்கள்.ஆனால் அவனால் எதையும் தீர்மானமாக செய்ய முடியவில்லை.அவன்  கமலாவின் வீட்டுக்கு செல்வதும் அவளுக்கு உதவிகள் செய்வதும் என்று அவளே உலகமாக வாழ்கிறான்.

இந்த நெடுங்கதையில் மூன்று கேள்விகளைத்தான் விநாயகம் மறுபடி மறுபடி கேட்டுக்கொள்கிறான்.ஒவ்வொரு முறை சண்டையிட்டுக்கொள்ளும் போதும் அவன் முற்றிலும் உருக்குலைகிறான்.உண்ண முடியாமல் உறங்க இயலாமல் சோர்கிறான்.அவளும் அப்படி ஏங்குவாள் என்று நினைத்து அவளை சென்று சந்திக்கும் போது அவள் உண்டு உறங்கி தலையனையை போட்டுக்கொண்டு தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.இதை அவனால் ஏற்கவே இயலவில்லை.அந்த பத்து வருடங்களில் அவள் எப்போதும் அவனிடம் உருகுவதில்லை.காதலின் பரவசத்தில் அவனுடன் உரையாடுவதில்லை.எப்போதும் சமநிலையுடன் இருக்கிறாள்.அவள் தண்னென்று இருக்கிறாள்.அவள் சிதறுவதே இல்லை.பித்தேறி அலைவதில்லை.இதைத்தான் முக்கியமாக விநாயகத்தால் புரிந்துகொள்ளவே இயலவில்லை.ஏன் அவள் அவனின் இருப்புக்காக ஏங்கவில்லை.அதே நேரத்தில் அவனிடம் வெறுப்பையும் அவள் காட்டுவதில்லை.வந்தாலும் சரி , சென்றாலும் சரி என்று இருக்கிறாள்.அதுதான் எப்போதும் விநாயகத்தை எரிச்சலூட்டுகிறது.

இரண்டாவது தன்னால் ஏன் அந்த உறவிலிருந்து விலக முடியவில்லை.மூன்றாவது அவள் ஏன் கடலூர் சென்ற பின் ஏன் மேலதிகாரியுடன் மட்டும் தங்கமே என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.அவனிடம் மட்டுமே ஏன் உருகினாள்.அவனைப் போய்  எப்படி தேர்தெடுத்தாள்.எதற்காக தேர்தெடுத்தாள்.அவனுக்கு இறுதிவரை இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை.ஒரு உறவில் எதிர்தரப்பின் ஆளுமை நம் உரையாடலில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் அதே நேரத்தில் நம்முடைய ஆளுமையும் முக்கியமானது தான்.விநாயகம் கமலாவின் காலில் விழுந்து கிடக்கிறான்.அவளின் சொல், உடல் , உத்தரவுகள்,சிரிப்பு அனைத்துமே அவனை சுழலில் சிக்க வைக்கிறது.முதல் முறை அவளை எஸ்டிடி பூத்தில் பார்த்ததை பற்றி சொல்லும் போது நல்ல பாம்பு போல வந்தாள் என்கிறான்.இறுதிவரை அந்த மயக்கத்திலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை.

ஏன் அவள் காதலை வெளிப்படுத்தாதவளாக ,தளும்பாமல்  இருக்கிறாள்.பெண்கள் காதலில் எந்தளவு Verbose ஆக இருக்கிறார்கள்.கமலா விநாயகத்தால் தன்னிடமிருந்து விலக முடியாது என்பதை உணர்கிறாள்.  எப்படியும் அவன் தன்னைத் தேடி வருவான் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.அவளின் தங்கைகள் அவளை திட்டியதை நினைத்து வருந்தாமல் இருக்கிறாள்.இதை அவள்கள் முன்னரே செய்திருக்கலாம் என்று மட்டும் சொல்கிறாள்.அவளுக்கு விநாயகத்தின் பத்து வருட வாழ்வை முழுங்கி விட்டதில் எந்த குற்றவுணர்வும் இல்லை.ஆனால் அதே கமலா தன் மேலதிகாரியிடம் தங்கமே என்று ஜொள்ளு விடுகிறாள்.இதையும் விநாயகத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை.பணத்துக்காக அவள் அப்படி செய்தாள் என்று கூட அவனால் ஏற்க முடியவில்லை.ஏனேனில் அவளிடம் நிறையவே பணமும் இருக்கிறது.அந்த வேலை இல்லாவிட்டாலும் அவளுக்கு சிக்கல் இல்லை.தன் மேலதிகாரியுடனான உறவால் அதிகாரத்தை சுவைக்க முடியம் என்பதால் அதை செய்தாளா.விநாயகம் அதை நோக்கி செல்லவில்லை.

தன் காலில் சுருண்டு கிடப்பவனை ஏன் கமலா அவமதித்த படியே இருக்கிறாள்.ஏன் அவனை சமமாக மதிப்பதில்லை.ஏனேனில் அதுவே அந்த உறவின் அச்சாணி.அந்த அச்சாணியில்தான் அந்த உறவு சுழல்கிறது.எப்போது அவள் அவனுக்காக உருகுகிறாளோ அப்போது அந்த உறவின் பித்திலிருந்து விநாயகம் தரையிறங்கி விடுவான்.அந்த ஈர்ப்பு போய்விடும்.எதை அவன் விரும்புகிறானோ எதற்காக ஏங்குகிறானோ அதை தராமல் இருப்பதே உறவை தொடரச் செய்யும்.மேலதிகாரியுடனான உறவில் அவள் ஏதோ ஒரு கட்டத்திற்கு பிறகு அப்படி நடந்து கொள்ளலாம்.அல்லது தன் மேலதிகாரியிடம் உருகுபவளாகவே இருக்கலாம்.அது அந்த உறவை தொடர பயன்படலாம்.இதெல்லாம் யாரும் தீர்மானித்து செய்வதில்லை.அது நிகழ்கிறது.அவ்வளவுதான்.

ஏன் விநாயகத்தால் அந்த உறவிலிருந்து இறுதிவரை வெளிவர முடியவில்லை.அவனுக்கானது அவனுக்கு கிடைக்கவில்லை.அவனின் சுய மதிப்பு , தன்னைப்பற்றிய அவனின் பிம்பம் அவளின் பிடியில் இருக்கிறது.அவள் அதை அளித்துவிட்டால் அந்த உறவு முடிந்துவிடும்.திரை விழுந்துவிடும்.ஈர்ப்பு குறைந்துவிடும்.அவள் மண்ணில் நடப்பவளாக , மலம் கழிப்பவளாக,அக்குளில் நாற்றம் எடுப்பவளாக மாறிவிடுவாள்.அதை தராத வரை அவனுக்கு விடியல் இல்லை.

அவள் அவனை சுரண்டவில்லை.ஆனால் உணர்வு ரீதியில் அவளின் அங்கீகாரத்துக்காக சார்ந்து இருக்கும் படி செய்து விடுகிறாள்.உணர்வு ரீதியான சார்பு.அவன் அவளின் ஆடி.அது உணர்வு ரீதியலான ஒர் சுழுற்சி.நல்ல பாம்பாக அவள் சுருண்டு இருக்கிறாள்.அவன் எவ்வளவு ஒடினாலும் அந்த வட்டத்தில் ஒட வேண்டியதுதான்.அதற்கு மேல் அவனுக்கு மீட்சி இல்லை.அவனின் ஆன்மாவும் உடலும் அவளுள் சுருண்டு இருக்கிறது.அவளை கொலை செய்ய செல்பவன் அது இயலாது  என்று அறிந்து சட்டென்று வெளியில் வருகிறான்.அவன் மீள்கிறான்.அவளின் பிடியிலிருந்து அவன் விலகுகிறான்.அவள் எளிய மனுஷி ஆகிறாள்.ஆணின் அகங்காரத்தை நிறைவு செய்யும் பெண் அவன் பார்வையில் புண்ணியவதி ஆகிறாள்.அகங்காரத்தை சிதறடிப்பவள் சூனியக்காரி ஆகிறாள்.

விநாயகத்துக்கு கமலாவின் மேல் வெறுப்பு வருவதும் அவளை கொலை செய்ய முடிவு எடுப்பதும் அப்போது அவனுக்கு இளமை திரும்புவதும் மகிழ்வதும் கதையில் நன்றாக வந்திருக்கிறது.வட்டார வழக்கில் தன்மையில் சொல்லப்பட்டிருக்கிறது கதை.

எங் கதே - இமையம் - க்ரியா பதிப்பகம்.