ஞாநி


ஞாநி கோலங்கள் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நிதி திரட்டி சுயாதீன திரைப்படங்களை எடுக்க விரும்பினார். அந்த அமைப்பின் தொடக்க விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா,பாலசந்தர்,மகேந்திரன் வந்திருந்தார்கள்.அவர் அதுவரை இயக்கிய குறும்படங்களை திரையிட்டனர்.அவருடைய குறும்படங்கள் அனைத்தும் குறைப்படங்கள்.திலீப்குமார் எழுதிய நிகழ மறுத்த அற்புதம் கதையின் குறும்பட வடிவமான திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் அவருடைய திரை முயற்சிகளில் முக்கியமானது.அவர் விரும்பிய திரை மொழி அவருக்கு அந்தப் படத்தில் தான் கைக்கூடியது என்று நினைக்கிறேன்.சமீபத்தில் சிறுவர்களுக்கான ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.அது இன்னும் வெளியாகவில்லை.அவருடைய நாடகங்கள் முதிர்ச்சியற்றவை.அவர் நம்பிய அரசியல் சரிகளை மையப்படுத்தி நாடகங்களை எடுத்தார்.அதை இன்னும் Subtleஆக தீவிரமாக ஆழமாக செய்வதற்கு அவருக்கு பொறுமை இருக்கவில்லை என்று தோன்றுகிறது.

அவருக்கு வைகோ மீது ஆழமான கசப்பு இருந்தது.முரசொலி மாறன் மீது மதிப்பு வைத்திருந்தார்.அவருடைய கட்டுரைகளில் தன் கருத்துகளை அவரால் தீவிரமாக முன்வைக்க முடிந்தது.2009யிலிருந்து 2011வரை அவரும் பாஸ்கர் சக்தியும் இணைந்து ஏற்பாடு செய்த கேணி கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன்.பல எழுத்தாளர்கள்,இசை கலைஞர்களின் பேச்சை அங்கு கேட்க முடிந்தது.ராஜ் கெளதமனின் பேச்சு இன்றும் நினைவில் இருக்கிறது.எல்லா எழுத்தாளர்களும் ஞாநி மீதிருந்த அன்பால்தான் தொலைவிலிருந்து வந்து நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அவருக்கு திரைத்துறையில் தான் விரும்பும் படங்களை வெற்றிகரமாக இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்க வேண்டும்.அவருடைய மகன் மனுஷ் நந்தன் திரைத்துறையில் வெற்றிபெற்றிருக்கிறார்.சில சமயங்களில் சில கனவுகள் தலைமுறைகளை கடந்து சாத்தியமடைகிறது.தன் மகன் விரும்பினார் என்று +1 வகுப்பில் சேர்க்கும் போது நிழற்படக்கலை பாடமும் உள்ள பிரிவில் அவரை சேர்த்திருக்கிறார்.அது அவர் இன்று ஒளிப்பதிவாளராக வெற்றி பெற்றுள்ளதற்கு பெரும் உதவி செய்திருக்கும்.அசோகமித்திரன் மீது ஆழமாக பற்றுடன் இருந்தார்.அவருக்கு என் அஞ்சலி.


No comments: