மிஷ்கினின் திரைப்படங்கள்









மிஷ்கின் கிறுஸ்துவ கருத்தியலால் அதிகம் பாதிக்கப்பட்டவர் என்ற எண்ணம் எனக்கு உள்ளது.குற்றம் – குற்றவுணர்வு – பாவம் – மன்னிப்பு – தியாகம் - மீட்சி என்ற தளம் அவருடைய படங்களில் அநேகமாக இருக்கிறது.இது இந்திய மனநிலை அல்ல.இங்கே ஒருவர் குற்றம் செய்தால் அவருக்கு சாபம் அளிக்கப்படுகிறது.குற்றத்திற்கான சாபம்.பின்னர் சாபத்திலிருந்து விடுதலை பெற சாபவிமோசனத்திற்கான வழிகளும் அவருக்கு தரப்படுகிறது.இரண்டலும் இருவேறு தரிசனங்கள் இருக்கிறது.கிறுஸ்துவ கருத்தியலின் பார்வையில் உங்கள் குற்றத்திற்கு நீங்களே பொறுப்பு.அதை எதன் மீதும் சுமத்திவிட்டு நீங்கள் தப்பித்து விட முடியாது.ஆனால் இந்திய பார்வையில் நமக்கு இயல்பாகவே விதி அல்லது ஊழ் என்ற கருத்துகள் பதிந்துவிடுகின்றன.கர்ணனின் சிக்கல்கள் எல்லாமே அவனது பிறப்பின் சிக்கல்களாக இருக்கின்றன.அவனுக்கு எல்லா தருணங்களிலும் முடிவு எடுப்பதற்கான முழு சுதந்திரம் இருக்கிறது.ஆனால் அவனது முடிவுகள் அனைத்தும் அவனது பிறப்பு – பிறப்பின் இழிநிலையில் இருந்து காப்பாற்றிய நண்பன் – அவனுக்கான உதவி – மரணம் என்ற தளத்திலேயே செல்கிறது.அவன் தன் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்றால் கட்டுப்படுத்தப்படுகிறான்.அவனுக்கான மீட்சி அவனது மரணத்தில் தான் சாத்தியமாகிறது.மனிதன் இயல்பில் சுதந்திரமானவன்.விளைவுகளை பற்றி பொருட்படுத்தாமல் செயல்களை ஆற்றக்கூடியவன் என்ற எண்ணம் நமக்கு  இல்லை.அது மேற்குலகின் கருத்தியல்.உங்களுக்கு ஒரு வேலை பிடிக்கவில்லை.ஆனால் நீங்கள் அந்த வேலையில் தொடர்ந்து நீடிக்கிறீர்கள்.அதற்கான காரணம் உங்கள் வீட்டு வாடகை,குடும்பம் நடத்த தேவையான செலவு,அடையாளம்,சமூக அந்தஸ்து போன்றவை.ஆனால் இது எதுவும் அந்த தருணத்தில் உங்களை அந்த வேலையை விட்டு செல்வதற்கான தடையை உருவாக்கவில்லை.இந்த காரணங்களால் நீங்கள் தடையை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.யாருக்கோ பதில் சொல்ல வேண்டியவர்களாக,யாருக்கோ கட்டுண்டவர்களாக நம்மை பாவித்து கொள்வதால் வரும் சிக்கல்கள் தான் இவை.விளைவுகளின் அச்சத்தால் செயல்கள் கட்டுப்படுத்தப் படுகின்றனவே தவிர விளைவுகளால் அல்ல.

இங்கு தான் சுதந்திர இச்சை (Free will) பிரதானமாகிறது.இது மேற்குலகின் கருத்தியல்.இதன் அடிப்படையில் ஒருவன் குற்றம் செய்யும் போது அதனால் வேறொருவர் பாதிக்கப்படும் போது அதை செய்தவன் குற்றவுணர்வு அடைகிறான்.மனிதன் முற்றிலும் சுதந்திரமானவன் என்பதால் அவனது குற்றத்திற்கு அவனே காரணமாகிறான்.அவன் விதி அல்லது ஊழ் அல்லது சூழல் என்ற காரணங்களை சொல்லி தப்பிக்க முடியாது.இப்போது அவன் முழுக்க தனிமனிதன்.தனிமனிதனாக வாழ்வை நோக்கும் போது வாழ்வின் அபத்தமும் , அவதியும் அவனை அறைகிறது.நவீனத் தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இந்த அபத்தத்தையும் அவதியையும் பதிவு செய்திருக்கிறது.ஆனால் அந்தளவு அது சுதந்திர இச்சையை பதிவு செய்யவில்லை.

மிஷ்கினின் கதாபாத்திரங்கள் எதுவுமே இந்திய கதாபாத்திரங்கள் அல்ல.அவர்கள் மேற்குலகை சேர்ந்தவர்கள்.அல்லது மேற்குலகின் வாழ்வையே தனதான வாழ்வாக ஏற்றுக்கொண்ட இந்த தலைமுறை இந்தியர்கள்.அவருடைய படங்களில் குற்றம் – காவல்துறை அதை கண்டுபிடிப்பது போன்ற விஷயங்கள் மறுபடி மறுபடி வந்தாலும் அவரின் படங்களில் புறவுலகம் என்பது முற்றிலும் இல்லை.அவர் காட்டும் புறவுலகம் ஒரு நம்பகத்தண்மையை பொருட்டு உருவாக்குப்படுபவை தான்.அவருடைய பிசாசு படத்தில் அத்தனை பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் மொத்தமே பத்து கதாபாத்திரங்கள் கூட வருவதில்லை.இதை மணிரத்னத்தின் அஞ்சலியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் அந்த கதையோடு சம்மந்தப்படாத யாருமே அந்த இரவில் வருவதில்லை.அஞ்சாதே படத்தில் காவலர் குடியிருப்பில் இரண்டு குடும்பங்களை தவிர வேறு காவலர் வீடுகள் வருவதேயில்லை.

பிசாசு படத்தில் ஒரு பெண் தன்னை கொலை செய்தவன் மீது இறந்து போகும் போது காதல் கொள்கிறாள்.அவனை பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டதால் அவனை இறுதியில் மீட்கிறாள்.மறுபுறம் நாயகன் தான்தான் அந்தப் பெண்னை கொலை செய்தது என்று அறியும் போது குற்றவுணர்வு கொள்கிறான்.மன்னிப்பு கேட்கிறான்.தன்னுயிரை தியாகம் செய்ய முயல்கிறான்.மீட்கப்படுகிறான்.பெண்ணின் தந்தை,பெண்,நாயகன் யாருமே அதை ஒரு விபத்தாக பார்ப்பதில்லை.தான் அதற்கு காரணமில்லை என்று பிசாசாக மாறிய பெண்ணும் கருதுவதில்லை , நாயகனும் கருதுவதில்லை.அவர்கள் தங்கள் மீது பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளதாக நினைத்து வேதனைப்படுகிறார்கள்.தங்களை சிதைத்துக் கொள்கிறார்கள்.தியாகம் செய்கிறார்கள்.மீட்சி கொள்கிறார்கள்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ஓநாயாக வரும் பாத்திரம் ஒரு சிறுவனை தான் எதிர்பாராத விதமாக கொலை செய்துவிட்டதால் குற்றவுணர்வு கொள்கிறான்.தன்னை தியாகம் செய்து அந்த சிறுவனின் குடும்பத்தை சேர்ந்த சிறுமியை எதிரிகளிடமிருந்த மீட்கிறான்.அவன் அதை ஒரு விபத்தாக கடக்கவில்லை.அஞ்சாதே படத்தில் வரும் கிருபாவின் நிலைக்கு சத்யாதான் காரணம் என்று இருவருமே நம்புகிறார்கள்.அது ஒரு பெரிய அமைப்பின் சிக்கல் என்று இருவருமே ஏற்கவில்லை.சத்யா கிருபாவின் நிலையை நினைத்து குற்றவுணர்வு கொள்கிறான்.கிருபா சத்யாவை பழிவாங்க முயல்கிறான்.

அவருடைய படங்களில் எப்போதும் கதாபாத்திரங்கள் உணர்ச்சி கொந்தளிப்பு நிலையிலேயே இருப்பார்கள்.தளர்வாக அமர்ந்து தேநீர் அருந்தும் காட்சிகள் மிகவும் குறைவு.அவர்கள் எதனாலோ பீடிக்கப்படுகிறார்கள்.தந்தையை பற்றி மகளிடம் சொல்ல முடியாத சிக்கல் (சித்திரம் பேசுதடி) , நண்பர்களுக்கு இடையிலான சிக்கல் (அஞ்சாதே), தங்கள் தாயை தேடி அலையும் இருவர் (நந்தலாலா) , தங்கை காணாமல் போன நேரத்தில் ஒரு குற்றத்தை ஆராய வேண்டிய நெருக்கடியில் இருக்கும் ஜேகே(யுத்தம் செய்) , குற்றவுணர்வால் பீடிக்கப்படும் ஓநாய் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்),தன்னை கொன்றவனை காப்பாற்ற போராடும் பிசாசு ( பிசாச) என்று அவருடைய பாத்திரங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு எண்ணத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.அந்த எண்ணம் அவர்களை செலுத்தியபடியே இருக்கிறது.அவர்கள் அதை தவிர்த்த புறவுலகை பார்ப்பதே இல்லை.அதனாலே மிஷ்கினின் திரைப்படங்களிலும் அவர்களை மீறிய புறவுலகம் இல்லை.மிஷ்கினின் படங்களில் கதை கதையை விட்டு வெளியே செல்வதே இல்லை.அவர் மிக இயல்பாக தன் புனைப்பெயராக தஸ்தாவெய்ஸ்கியின் பாத்திரத்தை தேர்ந்திருக்கிறார்.ஏனேனில் இவை அணைத்தும் ஒருவகையில் தஸ்தாவெய்ஸ்கியின் பாத்திரங்களின் குணங்கள்.அவர்கள் அணைவரையும் ஏதேனும் ஒரு எண்ணத்தால் பீடிக்கப்பட்டவர்கள்.அதன் வழி மட்டும் வாழ்வை அணுகுபவர்கள்.அவர்களுக்கு வேறு எதிலும் அக்கறை இருப்பதில்லை.

அவருடைய காட்சி அமைப்புகள் தமிழில் புதிது.ஒரே ஷாட்டில் பல்வேறு செயல்களை காட்சி படுத்திவிடுவார்.அதிகம் வெட்டி வெட்டி காட்ட மாட்டார்.நந்தலாலா படத்தில் அந்த சிறுவன் வீட்டுக்குள் நுழைவது, தன் பாட்டியை கழிப்பறைக்கு அழைத்து செல்வது,மறுபடி வந்து பீரோவை திறந்து தன் அன்னையின் புகைப்படத்தை எடுத்து முத்தமிடுவது,மறுபடி சென்று தன் பாட்டியை கழிப்பறையிலிருந்து அழைத்து வருவது என்று அனைத்தும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும்.அடுத்த dissolve.அதே அறையில் சிறுவன் அமர்ந்து உணவருந்துவான்.தொலைக்காட்சி ஒலித்துக்கொண்டிருக்கும்.பாட்டி கட்டிலில் அமர்ந்திருப்பார்,வேலைக்காரப் பெண் நடந்து செல்வார்.அந்த வீட்டில் அன்னையில்லை.பாட்டியும் சிறுவனும் மட்டுமே இருக்கிறார்கள்.பாட்டிக்கு பார்வை பிரச்சனை.எல்லாமே இரண்டு காட்சிகளில்(ஷாட்டுகளில்) சொல்லிவிடுவார்.பெரும்பாலும் ஒரு காட்சியை ஒரே ஷாட்டில் சொல்வது ஒரு அழகிய நடனம் போன்றது.அதை தமிழில் அதிகம் செய்பவர் மிஷ்கின்.தமிழில் இப்போது இருக்கும் சினிமா இயக்குனர்களில் அதிக உழைப்பின்றி மிக எளிதாக திரைக்கதை எழுதக்கூடியவர் மிஷ்கின் என்று நினைக்கிறேன்.அந்த வகையில் அவருக்கு முன் இருந்தவர் மகேந்திரன் மட்டுமே.மிஷ்கின் படங்களில் கதை எங்குமே நிற்காது.அவருடைய பலவீனங்கள் என்றால் அவரால் தன் கதாபாத்திரங்களுக்கு வெளியே தன் கதை எடுத்து செல்ல முடியாதது,புறவுலகை பெரிய அளவில் காட்ட முடியாதது, ஒரு சிக்கலை அமைப்பின் சிக்கலாக விரிக்க முடியாதது,மேற்குலகின் குற்றம் – குற்றவுணர்வு- தியாகம் – மீட்சி என்ற கருத்தால் பீடிக்கப்பட்டிருப்பது ஆகியவை.அவையே அவரது பலங்களும் கூட.




4 comments:

hema selvaraj said...

மிக நன்று

Unknown said...

செம்ம பதிவு வாழ்த்துகள்

shabi said...

முகமூடின்னு ஒரு படம் எடுத்துருந்தாரே அதப்பத்தி எதும் சொல்லலியே, நீங்க அந்த படம் பாக்கலியா இல்ல இக் கட்டுரைக்கு அது தேவை இல்லன்னு விட்டுடீங்களா

சர்வோத்தமன் சடகோபன் said...

நன்றி ஹேமா செல்வராஜ், ஷக்தி தமிழ்செல்வன், ஷபி.