தூய்மைவாதம்


வெங்கட் சாமிநாதன் பராசக்தி ஒரு பிரச்சாரத் திரைப்படம் என்று எழுதியிருப்பார்.தமிழில் திராவிட அரசியலை பேசிய முக்கியத் திரைப்படம் என்றும் அதைப் பார்க்கலாம்.அந்தப் படம் எப்படி திராவிட இயக்கம் பகுத்தறிவு பேசினாலும் அது கம்யூனிஸத்தின் பொருளாதார கொள்கைகளை ஏற்க மறுக்கிறது என்றும் சொல்கிறது.நீங்கள் பெரிய முன்முடிவுகளுடன் பார்க்காவிட்டால் அது சுவாரசியமான படம் தான்.

மாற்றுத் திரைப்படங்களை முன்வைப்பவர்கள் பைசைக்கிள் தீவ்ஸ் அப்போதே வந்தது என்று பேசுவார்கள்.ஒரு படம் குரலை ஏன் ஒடுக்கி பேசுவதி்ல்லை ஏன் அது யதார்த்தமாக இல்லை என்பது தான் பலரின் குற்றச்சாட்டு.குரலை ஒடுக்கி சற்று பூடகமாக பேசுவதாலேயே அது சிறந்ததாக ஆக முடியாது.சத்யஜித் ரே சுவாரசிமான இயக்குனர்.அவருடைய படங்கள் எளிமையானவை.அவை சற்று Subtle ஆக இருப்பதால் அவை மேண்மையானவை என்று நாம் சொல்கிறோம்.சத்யஜித் ரேவை விட மிருனாள் சென் படங்கள் கூர்மையானவை.உங்களை அமைதி இழக்கச் செய்பவை.

உதிரிப்பூக்கள் அதன் கூறுமுறை காரணமாகவே அதிகம் புகழப்பட்டது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் தூய்மைவாதம் காரணமாகவே பல காலம் இங்கு பெரிய கேன்வாஸில் கதைகள் உருவாகவில்லை என்று தோன்றுகிறது.ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி அந்த வகையில் முக்கியமானது.ஆனால் அவர் தமிழ் இலக்கிய மரபின் வழித்தோன்றல் அல்ல.அவருக்கு இங்குள்ள தூய்மைவாதம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.அதனாலேயே அப்படி எழுத முடிந்தது என்றும் தோன்றுகிறது.இங்கு பலர் எழுத அமரும் போதே பல்வேறு சட்டகங்களை எடுத்து மாட்டிக்கொள்கின்றனர்.

பெரிய கேன்வாஸில் கதைகளை சொல்வதற்கு வெகுஜன இலக்கியங்கள்,வணிக இலக்கியங்கள் பல வழிகளை காட்டக்கூடும்.வி.கே.ராமசாமியின் என் கலைப் பயணம் என்ற நூலை வாசித்தால் அவர் நாடகங்களில் எவ்வளவு தீவிரத்தோடு ஈடுபட்டார் என்றும் அந்தக் காலத்தில் நாடகங்களில் நடிக்கும் கலைஞர்கள் அதன் மீது எத்தனை மரியாதை வைத்திருந்தார்கள் என்பதையும் அறியலாம்.வெகுஜன நாடகங்களின் உலகம் எத்தனை தீவிரமானது என்பதை நாம் அறியலாம்.இன்று அந்த நாடகங்களே இல்லை.எத்தனை அபூர்வ தகவல்களை கொண்ட புத்தகம்.நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைக்கும் இன்றைய ஐயப்பனின் புகழுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் அந்த புத்தகத்தை படித்தால் அறியலாம்.ஆனால் நம் இலக்கியவாதிகளில் பலர் வி.கே.ராமசாமியின் புத்தகத்தை படிக்க மாட்டார்கள்.அந்த மேட்டிமை வாதம் தவறு.அதனால் பலன் ஏதும் இல்லை.

ஒரு முறை கே.என்.செந்தில் பஞ்சு அருணாச்சலம் போன்றவர்களால் தான் தமிழ் சினிமா கெட்டுவிட்டது என்று எழுதியிருந்தார்.பஞ்சு அருணாச்சலம் எத்தனையோ நல்ல படங்களை தந்திருக்கிறார்.ஆறிலிருந்து அறுபது வரை அவருடைய கதை தான்.எங்கேயோ கேட்ட குரல் அவருடைய கதை தான்.ஜெயமோகன் வெகுஜன இலக்கியத்தையும் ஆழக்கற்றதனால் தான் அவரால் விஷ்ணுபுரம் போன்ற அத்தனை பெரிய கேன்வாஸில் கதையை சொல்ல முடிந்தது.இல்லையென்றால் ஒரு தனி மனிதனின் புலம்பலைத்தான் அவரும் எழுதியிருப்பார்.ஒரு நாவல் அதன் தீவிரத்திலினாலேயே அதன் மொழியை அடைகிறது.குரல் ஒடுங்கி பேசுவதும் உயர்த்தி பேசுவதும் பாவனை மட்டுமே.

No comments: