குட்டிப் பிரபஞ்சம்





வா.மணிகண்டன் தன் நாவல் பற்றிய நேர்காணலில் மைய கதாபாத்திரத்தின் சுயதணிக்கை செய்யப்பட்ட கதை பற்றியும் அது ஏன் இந்த நாவலுக்கு அவசியப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார்.அவர் சொல்வது சரிதான்.

ஆனால் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் முழு சுதந்திரத்தோடு சிந்திக்க வேண்டும்.முழு சுதந்திரம் என்கிற போது அவன் யாரை பற்றியும் எதைப்பற்றியும் எப்படி வேண்டுமானாலும் பேசுபவனாக இருக்க வேண்டும்.அற மதிப்பீடுகளை பொருட்படுத்தக்கூடாது.

உதாரணமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.அன்றைய தலைப்பு மதுவிலக்கு வேண்டும் அல்லது வேண்டாம் என்பதாக இருக்கிறது.நீங்கள் மதுவிலக்கு வேண்டும் என்று பேச செல்கிறீர்கள்.இன்னொருவரையும் மதுவிலக்கு வேண்டும் என்று பேச அழைத்திருக்கிறார்கள்.மது விலக்கு வேண்டாம் என்று பேச வேண்டியவர் ஒருவர் மட்டுமே.அவர் கடைசி நேரத்தில் வரவில்லை. தொகுப்பாளர் நீங்கள் மதுவிலக்கு வேண்டாம் என்ற தலைப்பில் பேச முடியுமா என்கிறார்.சரி இப்ப என்ன பேசலாமே என்று ஐந்து நிமிடத்தில் பேசுவதற்கான தர்க்கத்தை உங்களால் உருவாக்கி கொள்ள முடியுமென்றால் நீங்கள் அநேகமாக எழுத்தாளர் ஆவதற்கான தகுதியை பெற்று விட்டீர்கள் என்று பொருள்.

எழுத்தாளனின் வேலை மதிப்பீடுகளை உருவாக்குவது அல்ல.எழுதுவது.அவ்வளவுதான்.உண்மையில் தீமையை மிக அருகில் தரிசித்தவர் நல்ல எழுத்தாளராக முடியும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது.இந்த உலகில் இதை விட கீழ்த்தரமாக ஒருவனால் நடந்து கொள்ள முடியாது என்று நாம் உணரும் விஷயத்தை ஒருவர் மிக எளிதாக மனதளவில் தர்க்கப்படுத்தி அதற்கான காரண காரியங்களை, சமூகவியல் ,உளவியல் விஷயங்களை பட்டியலிடுவார் என்றால் அவர் எழுத்தாளரே தான்.எழுதவில்லை என்றாலும்.

தஸ்தவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் தந்தை கரமசோவ் தன் மனைவியை நடத்திய விஷயத்தை தன் மகனிடம் சொல்லும் போது அல்யோஷா கண்ணீர் மல்க நிற்பான்.தந்தை கரமசோவ்,இவான்,திமித்ரி,அல்யோஷா,சேமர்டியகோவ்எல்லோருமே தஸ்தாவெயஸ்கி தான்.கிராண்ட் இன்கியூஸ்டார் என்ற பகுதியை தஸ்தாவெய்ஸ்கி மிக விரைவாக எழுதிவிட்டார் என்று எங்கோ படித்ததாக நினைவு.அதற்கு அடுத்த துறவி ஜோசிமாவின் சுயசரிதை பகுதியை எழுத அவருக்கு நிறைய நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது.

தீமையும் கீழ்மையும் மனிதனின் ஆதார குணங்கள் என்பதால் அவைகளை எழுத ஒரு எழுத்தாளன் செய்ய வேண்டியது ஒன்றுதான் , தன்னை தளர்த்திக்கொள்வது. சுதந்திரமாக சிந்திப்பது.சுதந்திரமாக சிந்திப்பது என்றால் தன் மனதையே எந்த ஒழுக்க நெருக்கடிகளும் இல்லாமல் ஆராய்வது.
சமூகவியல்,உளவியல்,விஞ்ஞானம்,வரலாறு போன்ற விஷயங்கள் எல்லாம் வெறும் தரவுகள்தான்.இவை எல்லாவற்றையும் வைத்து இறுதியில் சொல்லப்படுவது கதை.அந்தக் கதை என்பது ஒரு மாற்றுப் பிரபஞ்சம்.ஒரு எழுத்தாளன் தனக்காகவே எழுதிக்கொள்கிறான்.அவன் உருவாக்குகிறான் தனக்கான குட்டிப் பிரபஞ்சத்தை.மற்றவை அனைத்தும் By products தான்.

No comments: