வீடு திரும்புதல்





அந்த அந்திப்பொழுதில் இலைகளற்ற
மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தது கிளி.
தான் இன்றிரவு பாடும் பாடலில் மரக்கிளையில்
இலை துளிர்ந்து நாளை ஒளிச்சேர்ந்தால் இங்கே கானகம்
உருவாகும் என்றது என்னிடம்.
உற்சாகமான நான்
உடனே அடர்த்தியான இலைகள் கொண்ட மரத்தையும்
அதில் காய்களும், பச்சைக்கிளியையும் சேர்த்து ஒவியம் வரைந்தேன்.
அத்துடன் நிறைய மரங்கள் இருக்கும் சோலையை உருவாக்கினேன்.
இருக்கட்டும் என்று வீண்மின்களை சேர்ந்தேன்.நிலவையும்.
நான் வரைந்த படத்தை பார்த்த கிளி கண்கள் பணித்தது.
இன்றிரவு தன் பாடலுக்கு நான் இசை அமைத்தால் துளிர்த்து விடும் இலைகள் என்றது கிளி.
நான் இசை அமைக்க ஆயுத்தமானேன்.
கிளி அந்தியில் தன் பாடலை பாடியது.
வானத்திலிருந்து செங்குத்தாக பெய்த நீரில் நணைந்தோம் கிளியும் நானும்.
கிளி தொடர்ந்து பாடியது.
நான் பதற்றத்துடன் மொட்டை மாடியில்
காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க  
வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.
         

No comments: