இந்த வருடம்







இந்த வருடம் மகன் பிறந்தான்.அவன் பிறந்தபோது பெரிய பரவசம் ஒன்றும் இல்லை.ஆனால் இப்போதெல்லாம் அவன் சிரிப்பதை பார்க்கும் போது மனதை ஏதோ செய்கிறது.ட்ரி ஆப் லைப் மற்றும் மிரர் படங்களை மறுபடி பார்த்தேன்.என் மகன் சார்ந்து ஏதேதோ புரிதல்கள்.மேலும் இந்த வருடத்தில் அறுத்துகொண்டிருந்த முள் ஒன்று மனதை விட்டு விலகிச்சென்றது.அது அளித்த விடுதலை மிகப்பெரியது.மறுபடியும் ஒரு சலிப்பில் வேலையை விட்டுவிட்டேன்.இந்த சலிப்பு எப்படியோ மறுபடி மறுபடி வந்து சுற்றிக்கொள்கிறது.ஒரு வழியாக அதிலிருந்து மீண்டுவிட்டேன்.அடுத்த வருடத்தில் வேலை கிடைத்துவிடும்.இனி அநேகமாக நானாக வேலையை விட்டு நீங்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.

மூன்று சிறுகதைகள் எழுதினேன்.ஒன்றை என் வலைதளத்திலேயே பிரசுரம் செய்தேன்.மற்றது தளம் இதழில் வந்தது.ஒன்றை காலச்சுவடு இதழுக்கு அனுப்பினேன்.பிரசுரமாகும் என்று நினைக்கிறேன்.நிறைய வாசிக்கவில்லை.மொத்தமே பத்து புத்தகங்கள்தான் வாசித்திருப்பேன்.சில கவிதைகள் எழுதினேன்.வீடு திரும்புதல் , சர்தான் கவிதைகள் நன்றாக வந்தது.ரஜினிகாந்த் பற்றி எழுதிய சலிப்பு என்ற கட்டுரை பரவலாக வாசிக்கப்பட்டது.தொடர்ந்து எழுத வேண்டும் , வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.வாசிக்கும் போது எழுதும் போது மட்டுமே நிறைவாக இருக்கிறது.வாசிப்பதும் அது சார்ந்து சிந்திப்பதும் அது சார்ந்து எழுதுவதும் என்று இருக்க முடியுமென்றால் அது நல்ல மனநிலை.ஒரு நல்ல குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.இதுவரை எடுத்த குறும்படங்கள் மூலம் அடைந்த புரிதலில் முக்கியமானது நம்மால் பார்வையாளனின் கலாச்சார மனதோடு ஒர் உரையாடலை உருவாக்கி விட வேண்டும் என்பதுதான்.எனது இதுவரையான குறும்படங்களில் அதை நான் செய்யவில்லை.மனிதனுக்கு மரணமில்லை என்ற ஒரு கட்டுரை எழுதினேன்.கிட்டத்தட்ட அதே கருத்தை கொண்ட ஒரு குறிப்பை பேஸ்புக்கில் செல்வராகவன் பற்றி எழுதினேன்.இது ஏதோ ஒரு வகையில் வாசிப்பவர்களை பாதிக்கிறது.அப்படி அதில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை.ஆனால் மரணம் பற்றிய மனித மனதின் புதிரும் ஆர்வமும் நமக்கு ஒரு தரிசனத்தை விட முக்கியமானதாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.குறும்படம் எடுக்கவும் செலவாகிறது.கேமிரா படத்தொகுப்பு படப்பிடிப்பு தளம் இவைதான் அதிக பணத்தை எடுத்துக்கொள்கிறது.ஆனால் ஒரு படத்தை எடுக்கும் போது உருவாகும் பரவசத்திற்கு இணை வேறில்லை.அதற்காகவே இயக்கலாம்.சந்தர்ப்பம் உருவானால் அவசியம் எடுப்பேன்.இப்போது குறும்பட அலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.அதை ஒரு திரைப்பட மாதிரியாக மட்டுமே செய்கிறார்கள்.ஆனால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன்.யார் பார்த்தால் என்ன,யார் வாசித்தால் என்ன.அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் நமக்கு தெரிந்தவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும்.அவ்வளவுதான்.பார்ப்போம்.


ஆதியில் ஒரு சொல் இருந்தது







மழை பெய்யத்தொடங்கியது
நான் என் அறையில் என்னோடு தனியாக இருந்தேன்
நான் மழையை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தேன்
கூரையின் ஓட்டை வழி வெள்ளை பிங்கான் கிண்ணத்தில்
‘கிளிங்’ என்ற ஒலி எழும்பியது.
ஆதியில் ஒரு சொல் இருந்தது
சொற்களின் பெருவெளியில் நிரம்பி வழிந்தது கிண்ணம்.
கறுப்பு அன்னம்
தன் அலகால் என் சதை கிழித்து
கிண்ணத்தில் போட்டது.
கிண்ணம் முழுதும் குருதி.
குருதி முழுதும் சொற்கள்.
சொற்கள் முழுதும் மழையின் இரைச்சல்.
குருதியை அருந்திய அன்னம்
சொற்களை திருப்பியது மெளனத்திற்கு.
கிண்ணத்தில் ‘கிளிங்’ என்ற ஒலி எழும்பியது.
ஒலியை தன் அலகால் அள்ளித் தந்தது அன்னம்.
நான் மறுபடியும் மழையை கேட்கத் துவங்கினேன்.



உங்களுக்கு அதிக உடைமைகள் தேவையில்லை




உங்களுக்கு அதிக உடைமைகள் தேவையில்லை


எனது வீடு கானகத்தின் ஆழ்ந்த ரகசியமான இடத்தில் புதையுண்டு இருக்கிறது
ஒவ்வொரு ஆண்டும் , முந்தைய ஆண்டை விட இவி கொடிகள் நீளமாக வளர்கின்றன
உலக நடப்புகளால் சிதறாது நான் எளிமையாக வாழ்கிறேன்
விறகுவெட்டிகள் பாடுவது எப்போதாவது மரங்களின் ஊடே என்னை வந்து அடைகிறது
சூரியன் வானத்தில் இருக்கும் போதே , நான் எனது கிழிந்த துணிகளை பின்னுகிறேன்.
சந்திரனை நோக்கியவாறு,நான் எனக்கே புனித நூல்களை சத்தமாக வாசிக்கிறேன்
என் நம்பிக்கையை பின்பற்றுபவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்கிறேன்
மிகப்பரந்த இந்த வாழ்வை துய்க்க, உங்களுக்கு அதிக உடைமைகள் தேவையில்லை.

எனது சொந்த கிராமத்திற்கு திரும்புதல்

எனது சொந்த கிராமத்திற்கு பல ஆண்டுகளின் இன்மைக்கு பிறகு திரும்ப செல்கிறேன்
ஒரு நாட்டு விடுதியில் என்னை கிடத்தி மழையை கவனிக்கிறேன்
ஒரு கிண்ணமும் அங்கியும் மட்டுமே என்னிடம் இருக்கிறது
நான் ஊதுபத்தியை ஏற்றி தியானத்தில் அமர முயல்கிறேன்
சாளரத்திற்கு வெளியே இருளில் முழு இரவும் தூவானம்-
உள்ளே , இத்தனை வருட யாத்திரையின் நெகிழ்வான நினைவுகள்.

You do not need many things

My house is buried in the deepest recess of the forest
Every year, ivy vines grow longer than the year before.
Undisturbed by the affairs of the world I live at ease,
Woodmen’s singing rarely reaching me through the trees.
While the sun stays in the sky, I mend my torn clothes
And facing the moon, I read holy texts aloud to myself.
Let me drop a word of advice for believers of my faith.
To enjoy life’s immensity, you do not need many things.



Returning To My Native Village

Returning to my native village after many years’ absence:
I put up at a country inn and listen to the rain.
One robe, one bowl is all I have.
I light incense and strain to sit in meditation;
All night a steady drizzle outside the dark window --
Inside, poignant memories of these long years of pilgrimage.

Taiku Ryokan