சூட்சம புள்ளியாய் மனிதன்





தெகார்தே 'நான் சிந்திக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன்' என்றார்.அதாவது ஒரு மனிதனின் இருப்பு அவன் சிந்தனையே என்றார்.சிந்தனை என்பது ஒரு உடலற்ற ஒரு புள்ளியாக மாறுகிறது.அதாவது அது பரிமாணங்கள் அற்றது.கணிதவியலில் நாம் குறிப்பிடும் Cartesian coordinates முப்பரிமாண உலகில் ஒரு புள்ளியை குறிப்பட பயண்படுகிறது.தெகார்தே தத்துவ துறையில் நான் சிந்திக்கிறேன் , அதனால் நான் இருக்கிறேன் என்று சொல்லும் போது புலன்களை அவர் மறுக்கிறார்.சிந்தனையே இருப்புக்கான நியாயம் என்கிறார்.நம் இருப்பை அவர் ஒரு சூட்சம புள்ளியாக மாற்றும் போது அந்த புள்ளியை முப்பரிமாண உலகில் நிலைநிறுத்துவது எப்படி என்று கேள்வி வருகிறது.அப்படித்தான் Cartesian Coordinates உருவானது என்று நினைக்கிறேன்.அதாவது அவருடைய சிந்தனையில் இப்படியாக Cartesian Coordinates உருவாகியிருக்கலாம் என்கிறேன்.

நம் தமிழ் சூழலில் தத்துவம் போலவும் கலைகள் போலவும் விஞ்ஞானம் பார்க்கப்படுவதில்லை.விஞ்ஞானம் தத்துவத்தோடும் கலைகளோடும் உரையாடும் மற்றொரு அறிவுத்துறை மட்டுமே.விஞ்ஞானத்திற்கு நாம் உயர்ந்த அந்தஸ்து அளித்திருக்கிறோம்.அதை உள்வாங்கியவர்கள் அதிக பொருள் ஈட்டுகிறார்கள் என்பதனால் இருக்கலாம்.அது பெரிய விஷயம் என்கிறோம்.அதனால் அதை இலக்கியம் போலவோ , இசை போலவோ பேச தயங்குகிறோம்.

நிச்சயம் ஐன்ஸ்டீன் இருபதாம் நூற்றாண்டில் தான் உருவாகியிருக்க முடியும்.அவரது சிந்தனை தத்துவம் , கலை மற்றும் விஞ்ஞானத்திற்கு இடையில் நடந்த உரையாடலில் உருவானதுதான்.அவர் தேவதூதன் அல்ல.நியூட்டனின் காலத்தில் ஐன்ஸ்டீன் உருவாகியிருக்க வாய்ப்பில்லை.ஐன்ஸ்டீன் உருவாக இம்மானுவேல் காண்ட், நிட்ஷே, தஸ்தாவெய்ஸ்கி ஆகியோர் இந்த மண்ணில் தோன்றியிருக்க வேண்டும்.அந்த உரையாடல்களை கிரகித்த பின்னர்தான் ஐன்ஸ்டீன் தன் துறையில் சில புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்.

தமிழில் தத்துவமும், விஞ்ஞானமும் , கலைகளும் ஒன்றுடன் ஒன்று உரையாட வேண்டும்.அத்தகைய இதழ்கள் வரவேண்டும்.விஞ்ஞானம் ஒரு அறிவுத்துறை என்பதற்கு அப்பால் அதற்கு வேறு சிறப்புகள் கிடையாது என்று இலக்கியவாதிகள் உணர வேண்டும்.தொடர்ச்சியாக பல்வேறு அறிவுத்துறைகளுக்கு மத்தியில் உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமே நாம் நமது சிந்தனைகளை விஸ்திரிக்கமுடியும்.அதன் மூலம் இன்னும் சிறந்த இஷ்டலோகத்தை நோக்கி நாம் செல்ல முடியும்.அல்லது இப்போது இருப்பதே இஷ்டலோகம்தான் என்பதையாவது நிறுவமுடியும்.


No comments: