கோட்ஸ்டாண்டில் தொங்கும் உடல்




நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் என்று தொகுக்கப்பட்ட கவிதைகளில் முதல் கவிதை "இல்லாமல் இருப்பது".

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.

நமது உடல் அதன் புலன்கள் ஒரு இருப்பை கோருகிறது.அது தன்னை நிறுவிக்கொள்ளவே பிரயத்தனம் கொள்கிறது.ஆனால் காலம் கண்ணாடியாகக் கரைகிறது.ஒரு நதியாக ஒரு ஜலப்ரளயமாகச் சுழித்துச் செல்லுகிறது.விறைத்த கண்களுடன் அதன் மீது செத்த மீன்கள் செல்கின்றன.இறுதியில் நாம் இல்லாமல் போகிறோம்.நகுலன் இந்த காலத்தால் மறைந்துவிடும் நிலையைத்தான் சொல்கிறாரா என்றால் இல்லை.கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தொகுப்பில் உள்ள இந்த முதல் கவிதைக்கு கடைசிக்கவிதை என்ற தலைப்பிடப்பட்ட கவிதையே பதில்.

கோட்ஸ்டாண்ட் கவிதைகள் 59 வயது திருமணம் ஆகாத தனிமனிதனின் இருப்பு சார்ந்த துயரை சொல்லும் புகார் கவிதைகள் என்று வகைப்படுத்தலாம்.அது எளிதானதும் கூட.ஆனால் அவை அதுமட்டுமே அல்ல.உண்மையில் அவை அதுவல்ல.நகுலன் அல்லது நவீனன் அல்லது அவனுக்கு 59வயது ஆகிவிட்டது.வாழ்க்கை சலித்துவிட்டது.உடலின் உறுப்பான கையை வைத்து நிறைய எழுதிவிட்டான்.கண் நிறைய பார்த்துவிட்டது.மூளை நிறைய சிந்தித்துவிட்டது.மனம் அதையும் இதையும் நினைத்து அலுத்துவிட்டது.சரி, இந்த புலன்களை தாங்கி நிற்கும் உடலை சற்று தூக்கி அந்த கோட்ஸ்டாண்டில்தான் மாற்றி வைப்போமே என்று அவன் நினைக்கிறான்.விருக்ஷம் அற்ற பொந்தாக மாறினால் எப்படியிருக்கும் என்பதாகவும் இந்த கவிதைகளை பார்க்கலாம்.

அப்போது அந்த விருக்ஷம் அற்ற பொந்தாக மாறிய அவன் வெளி வாசல் திண்ணையில் இருக்கிறான்.அங்கு கண் தெளிவான பார்வைக்கு, வாய் வெற்றிலை பாக்குக்குப் பரபரக்கிறது.ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அப்போது அந்த உடல் அவனை பார்த்து கேட்கிறது.என்னை தூக்கி எறிந்துவிட்டாய் இப்பொழுது தெரிகிறதா என்று.

வேறொரு நாள் நள்ளிரவில் சூரல் நாற்காலியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றான்.அருகில் தரையில் ஒரு பாம்பு சுருண்டு கிடக்கிறது.இங்கு பாம்பு சுருண்டு கிடக்கிறது என்பது உடல் அற்று நெளிந்து நெளிந்து தன்னையே சுற்றிக் கொண்டு கடைசியில் தலையும் வாலும் ஒன்று சேர வெறும் சுன்னமாகக் சுருண்டு கிடக்கும் நிலைதான்.
சுன்னமாகக் சுருண்டு கிடக்கும் அவன் எல்லைகளைக் கடந்து கொண்டிருக்கிறான்.வெறும் சுன்னமாக மாறியவன் உடல் அற்றவன்.உடல் அற்றவன் புலன்கள் அற்றவன்.புலன்கள் அற்றவனிடம் காமம்,குரோதம்,கோபம் ஆகிய உணர்வுகளை தூண்ட முடியாது.சிலையாக வீற்றிருக்கும் மேதைகளை காலக்கறையான் திண்றுகொண்டிருக்கிறது.அவன் லட்சியவாதங்கள் தோற்றுவிட்டதால் துவண்டு போய் டாஸ்மாக்கில் நண்ணீர் அருந்த போவதில்லை.ஏனேனில் அவனுக்கு இருப்பே இல்லை.இருப்பு அற்றவனுக்கு உலகம் இல்லை.உலகம் அற்றவனுக்கு லட்சியவாதங்களும் மேதைகளும் அவர்களுடைய சிலைகளும் அவர்கள் உருவாக்கிய சித்தாந்தங்களும் ஒன்றுமில்லை.அவன் அதை கடந்துசெல்கிறான்.இறந்தவர்களின் சாந்நித்தியம் , இருப்பவர்களின் மிரட்டல் இதுவும் இனி அவனை ஒன்றும் செய்ய முடியாது.அவன் எல்லோரும் பெளதிக விதிகளுக்கு உட்பட்டு பின்தங்கி நிற்கையில் எல்லைகளை கடந்துகொண்டிருக்கிறான்.அப்போது அவனை யாரோ நீங்கள் யார் என்று கேட்கிறார்கள்.அவனுக்கு அவன் யார் என்பது மறந்துவிட்டது.அவன் இல்லாமல் ஆகிறான்.அவன் அடையாளம் அற்றவனாக மாறுகிறான்.ஆக நகுலன் முன்வைக்கும் இல்லாமல் போகிறோம் என்பது உடல் அற்று சுன்னமாக ஒரு பொந்தாக மாறிய நிலையில் எல்லைகளை கடப்பதால் யாருமற்றதாக மாறும் நிலை.

இதே கோட்ஸ்டாண்ட் தொகுப்பில் தாடி என்று ஒரு கவிதை இருக்கிறது.தாடி வைப்பது , மொட்டை அடித்துக்கொள்வது நாம் அறிந்துதான் செய்கிறோம்.உடல் வழியாக ஒரு அடையாளத்தை உருவாக்குகிறோம்.நான் பார்த்தவரை நகுலனின் எந்த புகைப்படத்திலும் அவருக்கு தாடியில்லை.

இறுதியாக உடலை கோட்ஸ்டாண்டில் மாட்டிவிட்டு வெளியில் சுன்னமாக மாறி எல்லைகளை கடந்து அவர் வெளிதிண்ணையில் அமர்ந்திருக்கிறார்.அப்போது ராமச்சந்திரன் என்று ஒருவர் அவரை பார்க்க வருகிறார்.அவரை ராமச்சந்திரனா என்று கேட்கிறார்.வந்தவர் ராமச்சந்திரன் என்கிறார்.அதன் பின் இவர் எந்த ராமச்சந்திரனா என்று கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை.ஏனேனில் வெளித்திண்ணையில் அமர்ந்திருப்பவர் இந்த ராமச்சந்திரனின் உடலை கழற்றி கோட்ஸ்டாண்டில் மாட்டிவிட்டால் அவரும் தன்னை போலவே ஒன்றுமில்லைதான் என்பதை அறிந்துவிட்டார்.அதனால் எல்லா ராமச்சந்திரன்களும் சாரம்சத்தில் ஒன்றுதான் , ஒன்றுமில்லையும்தான் என்பதால் அவர் எதுவும் கேட்கவில்லை.

ராமச்சந்திரன் சென்ற பின் அதே வெளித்திண்ணையில் அவர் அந்தி பொழுதில் அமர்ந்திருக்கிறார்.கையெழுத்து மறையும் வேளையில் மரம்,தந்திக்கம்பம், வீடு எல்லாமே மறைகின்றன.இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது.நம் கண் விழியில் ஒளிபட்டு பிரதிபலிக்காததால் மரம் ,தந்திக்கம்பம் , வீடு எல்லாம் மறைந்துவிட்டன.ஆனால் அவை உண்மையில் இருக்கின்றன.நாம் இல்லாவிட்டாலும் இருக்கும்.நாம் எதையும் உருவாக்குவது இல்லை.

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம் 

என்ற கவிதையை இப்படி மாற்றி எழுதலாம்.

எல்லோரும் இருக்கும் பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
ஒன்றுமில்லை.

இங்கு "யாருமில்லாத" என்பதிலும் "எல்லோரும்" என்பதிலும் வருவது மனிதர்கள் மட்டும்தான்.மரம் , தந்திக்கம்பம் ,வீடு ஆகியவற்றை இவை குறிப்பதில்லை.அதையும் அவரை ஸ்டேஷன் என்ற கவிதையில் சொல்லிவிட்டார்.

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
‘அது ஸ்டேஷன் இல்லை’
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது.

ஆக , இந்த "யாருமில்லாத" என்பது மனிதர்களை மட்டுமே குறிக்கின்றது என்பது முக்கியம்.ஏனேனில் நகுலன் முன்வைப்பது அத்வதை நோக்கு அல்ல.நீயே அது , அனைத்தும் பிரம்மம் என்று அத்வைத்த தரிசனத்தை தன் கவிதைகளில் அவர் முன்வைக்கவில்லை.நகுலனின் இந்த கோட்ஸ்டாண்ட் கவிதைகள் நாம் நமது உடல் வழி அடையாளங்களை கழற்றி கோட்ஸ்டாண்டில் மாட்டிவிடுவதன் மூலமாக "நாம் ஒன்றுமில்லை" என்ற தீவிரமான ஆன்மிக நிலையை அடைவதை குறித்து பேசுகின்றன.நாமும் நமது  அடையாளங்களை சுமந்து திரியாமல் சற்று வெளிவாசல் திண்ணையில் அமரந்து தளர்வான மனநிலையில் கண்ணாடியாக கரையும் காலத்தை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருக்கலாம்.அப்போது அதில் நாம் விறைத்த கண்களுடன் செத்த மீன்களாக மிதந்துகொண்டிருப்பதை பார்த்து புன்னகைக்கலாம்.


காகத்திடம் பேசிய குட்டிப்பெண்




  


ஏன் முகச்சவரம் செய்யவில்லை
ஏன் வீட்டை இவ்வளவு குப்பையாக வைத்திருக்கிறாய்
ஏன் துணிகள் எல்லாம் இவ்வளவு அழுக்காக இருக்கின்றன
அங்கே என்ன துர்நாற்றம் வீசுகிறது
நேற்றிரவு உண்ட பாத்திரங்களை கூட கழுவாமல் என்ன செய்துகொண்டிருக்கிறாய்
ஏன் இன்னும் இரவு உணவு அருந்தவில்லை.
இன்று மாலை உன் வீட்டின் எதிர்வீட்டு மாடியில்
சிவப்புச்சட்டை அனிந்திருந்த குட்டிப்பெண் காகத்திடம் பேசிக்கொண்டிருந்தாள்.
அதை பார்க்காமல் முடங்கிகிடக்கிறாய் 
என்று கோபப்பட்டது வீட்டுக்கு வந்த கறுப்பு அன்னம்.

நான் என் கதையை சொன்னேன்
சரி வா, உனக்கு நீரில் நடக்க கற்றுத்தருகிறேன் என்றது அன்னம்
நான் நீரில் முழ்கிவிடுவேன் என்று கதறினேன்
என்னை இழுத்து சென்ற கறுப்பு அன்னம் என் கதையை தூக்கி ஆற்றில் போட்டது.
இப்போது நானும் கறுப்பு அன்னமும் நதியில் நடந்துகொண்டிருக்கிறோம்

அச்சம் தவிர்






பொது மைதானத்தில் தண்டால் எடுத்துக்கொண்டிருக்கும் கிருபாவை சிலர் விரட்டிவிடுகிறார்கள்.அடிவாங்கி வீட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளும் தன் நண்பன் கிருபாவை அடித்தவர்கவகளை சத்யா சென்று தாக்குகிறான்.கிருபாவும் சத்யாவும் பால்ய கால நண்பர்கள்.இருவரின் தந்தைகளும் காவல் துறையில் பணிபுரிவதால் தேனாம்பேட்டை காவலர் குடியிருப்பில் எதிர்எதிர் வீட்டில் இருக்கிறார்கள்.கிருபா துணை ஆய்வாளர் தேர்வுக்கு தன்னை மிகவும் வருத்தி தயார்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில் சத்யா எந்த இலக்கும் இல்லாமல் மதுபானக்கடையில் பொழுதுகளை கழிக்கிறான்.

தன்னை பொது இடத்தில் பலரும் பார்க்கும் நிலையில் சத்யாவை அவருடைய தந்தை செருப்பால் அடிக்கிறார்.மேலும் அவனை கிருபாவோடு ஒப்பிட்டு தரக்குறைவாக பேசுகிறார்.தன்னை அவமானப்படுத்திய தந்தையை அவமானப்படுத்த வேண்டுமென்றால் தான் துணை ஆய்வாளர் ஆவதே வழி என்று கருதுகிறான் சத்யா.அதிகாரத்தில் இருக்கும் தன் உறவினரின் துணையோடு தேர்வில் வெற்றி பெறுகிறான்.ஆனால் துரதரிஷ்டவசமாக தன் முழு கவனத்தையும் அந்த தேர்வில் மட்டுமே செலுத்திய கிருபா தோற்றுவிடுகிறான்.

அஞ்சாதே திரைப்படம் இந்த புள்ளியிலிருந்து துவங்குகிறது.கிருபாவின் தோல்விக்கு யார் காரணம்.கருடக்கொடி என்ற என்.டி.ராஜ்குமாரின் கவிதை தொகுப்பில் "ஆளற்ற ஒரு கூட்டம் துரத்திக் கொண்டிருக்கிறது" என்ற ஒரு வரி வருகிறது.உண்மையில் கிருபாவின் தோல்விக்கு காரணம் ஆளற்ற ஒரு கூட்டம்தான்.யார் ஒருவரையும் குறிப்பிட்டு சொல்லவே முடியாது.தேர்வு முறை , ஊழல், தகுதியற்றவர்களக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் இப்படி நிறைய காரணங்கள்.ஆனால் கிருபா அவை அணைத்தையும் ஏற்கத்தயாராக இல்லை.அவன் தன் எதிர்வீட்டில் இருக்கும் சத்யாதான் தன் தோல்விக்கு காரணம் என்று நம்புகிறான்.அது எளிதானதுகூட.அதன் மூலம் அவனுக்கு ஒரு எதிரி கிடைக்கிறான்.அவனை அவன் திட்டலாம்.கத்தியால் குத்தலாம்.அவமானப்படுத்தலாம்.ஆளற்ற ஒரு கூட்டம் என்ற கருத்தை அவன் ஏற்றால் அவன் நிலைதடுமாறலாம்.அவனால் யார் ஒருவரையும் குற்றம் சொல்ல முடியாது.எதிரி ஒருவனை கைகாட்டி அதன் மூலம் ஏமாற்றப்பட்டவர்களையும் , தோற்றுபோனவர்களையும், கையறு நிலையில் இருப்பவர்களையும் ஒருங்கினைப்பது எளிது.சட்டென்று வன்முறையை சாத்தியப்படுத்தக்கூடிய எளிய தந்திரம் அது.அரசியல் இயக்கங்கள் எப்போதும் கையறுநிலையில் இருப்பவர்களை பார்த்து நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு அவர்களே காரணம் என்று ஒரு கூட்டத்தை சுட்டிகாட்டுகிறார்கள்.அப்படி ஒரு கூட்டத்தை சுட்டிக்காட்டுவதன் மூலமாக இனரீதியாகவோ, மொழிரீதியாகவோ, மதரீதியாகவோ அல்லது தேசம் சார்ந்தோ கையறு நிலையில் இருப்பவர்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்குகிறார்கள்.அந்த வெறுப்பு எப்போதும் வன்முறையாக மாறலாம். வெறுப்பு எங்கும் ஈதர் போல பரவியிருக்கும் நிலையில் ஒரு சின்ன அசைவு, ஒரு சொல், லேசான அடிதடி அல்லது வதந்தி கையறு நிலையில் இருப்பவர்களை ஒருங்கிணைத்து கும்பலாக மாற்றிவிடும்.கும்பல் கூடி அழிக்கும்.அத்தகைய கும்பலின் வன்முறையால் பேரழிவுகளை உருவாக்குவதன் மூலம் அந்த அரசியல் இயக்கம் அதிகாரம் நோக்கி நகர்கிறது.கையறு நிலையில் இருப்பவன் அதே நிலையில் தொடர்கிறான்.

அவமானப்பட்டு நிற்கும் கிருபா தன் அவமானத்திற்கு சத்யா தான் காரணம் என்று எந்த சந்தேகமுமின்றி நம்புகிறான்.அதே பகுதியில் இளம் பெண்களை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் பணம் பறிக்கும் தொழில் செய்து வரும் தயா என்பவன் கிருபாவிற்கு மதுபானக்கடையில் அறிமுகமாகிறான்.

ஒரு அரசியல் தலைவன் அதிகாரத்தை நோக்கிய தன் நகர்வுக்காக மக்கள் மத்தியில் வெறுப்பை  உருவாக்குவது போல தயா துணை ஆய்வாளனாகிவிட்ட சத்யா மீதான வெறுப்பை கிருபாவிடம் தீவிரப்படுத்துகிறான்.கிருபா எளிதில் அஞ்சக்கூடியவன்.அவன் தன் முன் இருக்கும் பிரச்சனையை எதிர்கொள்ளும் திராணியற்றவன்.பொது மைதானத்தில் ஒருவன் தன்னை அடித்துவிடும் போது அவன் அதை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை.அவனது நண்பர்களிடம் சொல்லவில்லை.எந்த எதிர்வினையும் செய்யவில்லை.அவன் அஞ்சுகிறான்.அவன் வீட்டிற்குள் சென்று ஒளிந்துகொள்கிறான்.துணை ஆய்வாளராக பொறுப்பேற்கும் சத்யா அந்த வேலையின் யதார்த்தத்தை சிறிது சிறிதாக புரிந்துகொள்கிறான்.அவன் தன் முன் வரும் பிரச்சனையை எதிர்கொள்கிறான்.தன் நண்பனை பொது மைதானத்தில் அடித்துவிடும் ரெளடிகளை திருப்பி அடிக்கிறான்.அது போலவே தன் வேலையில் தன் பாதுகாப்பில் மருத்துவமனையில் இருக்கும் கைதியை தாக்கவரும் ரெளடிகளை எதிர்க்கிறான்.சத்யா அச்சத்தை தவிர்க்கிறான்.கிருபா அச்சத்தை தவிர்க்கவில்லை.சத்யா அஞ்சா நெஞ்சன் அல்ல.ஆனால் அவன் அச்சத்தை தவிர்க்கிறான்.அதன் மூலம் யதார்த்தத்தை எதிர்கொள்கிறான்.கண்களை மூடிக்கொள்வதில்லை.கிருபா கண்களை மூடிக்கொள்கிறான்.அவன் எந்த உண்மையையும் பார்க்க விரும்பவில்லை.துணை ஆய்வாளர் தேர்வில் தோற்றுபோகும் கிருபா இனி என்ன செய்யலாம் என்று சிந்திப்பதே இல்லை.மேற்கொண்டு படிக்கலாம், அல்லது வேறு வேலைக்கு முயற்சி செய்யலாம் அல்லது ஒரு பெண்னையாவது காதலிக்க முயற்சிக்கலாம் என்று அவன் யோசிப்பதே இல்லை.முகச்சவரம் செய்து சிகையை அலங்கரித்து நல்ல ஆடைகளை உடுத்தி இருசக்கர வாகணத்தில் கண்ணதாசன் சாலையில் சென்றிருந்தாலே கிருபாவின் வாழ்க்கை மாறியிருக்கும்.ஆனால் அவன் தாடி வளர்த்து வீட்டில் முடங்கிவிடுகிறான்.அவன் முடிந்துவிடுகிறான்.மரணமின்றி அவனுக்கு விடுதலை இல்லை.அந்த விடுதலையை சத்யா அவனுக்கு இறுதியில் அளிக்கிறான்.

சத்யாவின் மீதான வெறுப்பை கிருபாவிடம் சிறிது சிறிதாக தீவிரப்படத்தும் தயா ஒரு கட்டத்தில் தன் செயல்பாடுகளில் கிருபாவை இணையச்செய்கிறான்.ஒரு முறை கிருபா மதுபானக்கடையில் குடித்துக்கொண்டிருக்கும் போது அங்கே வேலை செய்யும் சிறுவனை சத்யா அழைக்கிறான்.அப்போது அந்த சிறுவனை சத்யாவிடம் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறான் கிருபா.இது ஒரு முக்கியமான காட்சி.கிருபா எப்போதும் தன்னை பற்றி மட்டுமே சிந்திப்பவனாக இருக்கிறான்.தன்னிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் விலகி அந்த மதுபானக்கடையில் அவன் தன்னை சுற்றிய உலகத்தை பார்த்திருந்தால் தான் தன் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றையும் இழக்கவில்லை என்பதை அறிந்திருப்பான்.அவன் விடுதலை அடைந்திருக்கலாம்.கிருபாவின் பிரச்சனைகள் எளிய தோல்விகளை எதிர்கொள்ள தயங்குவதும், அச்சத்தை தவிர்க்காமல் அதன் விசையில் ஒடுவதும், யதார்தத்தின் முன் தன் கண்களை மூடிக்கொள்வதும், தன்னில் ஒடுங்கிவதும்தான்.

இந்த படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.கிருபாவின் தங்கை பெயர் உத்ரா.உத்ரா நல்ல பெயர்.ஒரு வீட்டில் ஆண் வேலை இல்லாமல் படிப்பு இல்லாமல் முடங்கியிருக்கும் போது அந்த வீடு எப்படி காட்சியளிக்கும் என்று நான் நன்கு அறிவேன்.நான் வேலையில்லாமல் வீட்டில் முடங்கியிருந்த நாட்களை கிருபாவை அவனது தாயும் தந்தையும் ஏதேனும் வேலைக்கு செல்லச்சொல்லி வற்புறுத்தும் காட்சியை பார்க்கும் போது நினைத்துக்கொள்வேன்.வேலை என்பது சம்பாத்தியம் மட்டும் அல்ல.அது ஒரு அடையாளமும் கூட.கிருபா ஒரு வேளை துணை ஆய்வாளராக பொறுப்பேற்று வேலைக்கு சென்றிருந்தால் கூட அவன் தோற்றே போயிருப்பான்.வேலையில் மேல் அதிகாரிகளின் அழுத்தம், பயம் இவைகளே அவனை எளிதில் விழுங்கியிருக்கும்.அவன் எந்த கருணையுமின்றி தான் ஒரு கோழை, கோழை என்பதால் அச்சத்தின் விசையிருக்கும் திசையில் ஒடுகிறேன், நான் அப்படி ஒடாமல் அதை எதிர்கொள்ள வேண்டும் என்ற தெளிவை அடையாத வரை அவனுக்கு மீட்சி இல்லை.ஆனால் அத்தகைய மீட்சி கிடைப்பது சாதாரண விஷயம் இல்லை.அதற்கு அவன் மிகத்தீவிரமாக போராட வேண்டும்.ஆனால் அது அவனுக்கு சாத்தியமடையாமல் போகிறது.இறுதியில் சத்யா அவனை கொல்கிறான்.கிருபாவின் தங்கை உத்ராவை சத்யா திருமணம் செய்துகொண்டு கிருபா என்ற குழந்தையோடு வாழ்வதாக காண்பிப்பதோடு திரைப்படம் நிறைவு பெறுகிறது.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக அமைந்த படம் இது.மிஷ்கின் பல பேட்டிகளில் தான் நந்தலாலா, ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற திரைப்படங்களை எடுக்கவிரும்புகிறேன் என்ற விதத்தில் பேசுகிறார்.அஞ்சாதே திரைப்படத்தில் என்ன பிரச்சனை என்று எனக்கு நிஜமாகவே புரியவில்லை.தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மனித மனத்தின் இருட்குகைக்களுக்குள் தீவிரமாக பயணித்த திரைப்படம் அஞ்சாதே.தயா மற்றும் கிருபாவின் கதாபாத்திரங்களே இந்த திரைப்படத்தின் மையம்.ஒநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தோடு ஒப்பிடும் போது எனக்கு அஞ்சாதேவும் சித்தரம் பேசுதடியும் சிறந்த திரைப்படங்களாக தோன்றுகிறது.

படத்தில் தன் மகள் கடத்தப்பட்ட நிலையில் போலீஸ் சொல்வதை கேட்பதா அல்லது தன் பெண்ணை கடத்தி வைத்திருக்கும் கும்பல் சொல்வதை கேட்பதா என்று புரியாமல் தவிக்கும் நரேன் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.அவருடைய குரல் மிகவும் வசீகரமானது.பாலுமகேந்திராவின் குறும்படங்களில் அவரின் நடிப்பை பார்த்திருக்கிறேன்.மிகச் சிறப்பான நடிகர்.மிஷ்கின் விரும்பினாலும் விரும்பவில்லையென்றாலும் அஞ்சாதே அவர் இயக்கிய இயக்கவிருக்கும் படங்களில் முக்கியமானதாக எப்போதும் இருக்கும்.

The Possessor


And there was there an herd of many swine feeding on the mountain : and they besought him that he would suffer them to enter into them.And he suffered them. Then went the devils out of the man, and entered into the swine: and the herd ran violently down a steep place into the lake, and were choked.When they that fed them saw what was done, they fled, and went and told it in the city and in the country. Then they went out to see what was done; and came to Jesus, and found the man, out of whom the devils were departed, sitting at the feet of Jesus, clothed, and in his right mind: and they were afraid.


LUKE 8:32 -5 





Possessed can mean that someone is possessed by an idea.Also an idea can possess someone.The Novel Besy in Russian was earlier translated as The Possessed in English.But the later translations have preferred to use the Title Devils or the Demons.So it is not about the Possessed, but about the Possesser.The Possesser is the Devil or the Demon.The story of the novel is more or less what is mentioned in the epigraph above.

Stephan Trofimovich Verkhovensky a Professor and an intellectual in various subjects is the herdsman whom the devils initially possess.Later it leaves him and enters the swine.The herd possessed by the Devils get into the lake and are choked.The Swine are Stavrogin (Trofimovich's Student), Peter (Trofimovich's Son), Kirillov (Stavrogin's disciple),Shatov (Again Stavrogin's disciple).

Peter heads the inner circle in the small provincial town in Russia.The agenda of the inner circle is to create social unrest through which the foundations of the Nation would be questioned by the People.Later as a result of unrest, this inner circle along with the other inner circles spread across the nation supported by groups from outside would capture the power and rule the country.

The inner circle consists of Liputin, Lyamshin, Virginsky, Shigalov, Erkel, Tolkachenko.Shatov and Kirillov are somehow related to the inner circle.Peter wants Stavrogin to be the Prophet of the new rule, the new order.

At last the Herd possessed by Devils runs violently and steeps into the lake and gets choked down.Stavorgin commits suicide because of guilt.Kirillov commits suicide for his idea.His idea is that by Killing himself he becames God (Man-God).By killing himself he proves he is completely free.He can execute anything of his self-will.Shatov is murdered by the inner circle as they are afraid that he might inform about them.Liputin, Lyamshin, Virginsky , Erkel , Shigalov ,Tolkachenko are later arrested for the murder.Peter flees to Switzerland.

Trofimovich , the Herdsman , the non-believer while on death bed confesses and takes the sacrament  and dies.The Herdsman finally sits at the feet of Jesus, clothed and he is in his right mind.So the Novel is not about the People possessed by the Idea.But about the Idea itself.i.e. The Demons or the Devils.Devils or Demons are the ideas of Atheism, Materialism, Empiricism, Socialism, Communism, Positivism,Science and the Progressive ideas.

Normally all progressive thinkers , writers are the ones who are in someway alienated from their roots.Shatov explains this to Stavrogin once.A Man who loses his people and his national roots also loses the faith of his Fathers and his God.And through them the devils enter into the Swine.And Stephan Trofimovich is the man who loses his people and his National roots and his God.

"When they that fed them saw what was done, they fled, and went and told it in the city and in the country" - As the Herd ran violently when it got Possessed of the Devils , it Kills Marya (Stavrogin's legal wife),Lebyadkin(Marya's Brother) and their Servant, it Kills Lizaveta (Stavrogin's love), burns the houses of the local people across the river, kills Shatova( Shatov's wife and Stavrogin's Mistress), kills the new born baby of Shatova as it is left unattented and catches cold, kills a 14 year old little girl raped by Stavrogin.

Dostoevsky is not worried by the persons who are possessed by the Idea.But as such about the Idea itself.And the only way he sees through the problem is to make the Herdsman sit at the feet of Jesus,i.e.to ask his Russian men to sit at the feet of Jesus in their Russian Orthodox Church and not in the Roman Catholic Church.


நிலையமைதி

                                            


உங்கள் வீட்டின் வெளிவாசல் சாத்தப்பட்டுவிட்டது
வீட்டில் யாருமில்லை
நீங்கள் வணங்கவோ வன்மம் கொள்ளவோ
கடவுள் இல்லை
உங்கள் ஆடைகளை துறந்து புரட்சி செய்ய
எந்த சித்தாந்தமும் இல்லை
நீங்கள் கொலை செய்யவோ கிழித்தெறியவோ
உங்கள் பிரதேசத்தில் மனிதர்கள் இல்லை
உங்கள் மலத்தையே நீங்கள் உண்பதற்கான சூழற்சி இயந்திரம்
உங்கள் உடலில் பொருத்தப்பட்டுவிட்டது
நிலைக்கண்ணாடியில் உங்கள் உருவத்தை
பார்த்தவாறு நீங்கள் நிலையமைதி கொள்ளலாம்
இனி நீங்கள் செய்ய ஒன்றுமில்லை.

எம்.யுவன் கவிதைகள்





யுவன் மூன்று அல்லது நான்கு வயதில் கொக்கின் பெயர் கொக்கு என்று அறிகிறார்.பிற்காலத்தில் கொக்கு என்றால் வெண்மையென கற்கிறார்.பின்னர் கொக்கு என்பது அழகு என்றும் விடுதலையை குறிக்கலாம் என்றும் புரிந்துகொள்கிறார்.மேல் அதிகாரி வேலையிடத்தில் ஏசும் போதும் வெய்யில் கசகசக்கும் போதும் கொக்கின் மிருதுவை உணர்கிறார்.இனி வரும் காலங்களில் கொக்கு தன்னில் என்னவாக உருமாற்றம் அடையும் என்று உருமாற்றம் கவிதையில் அவரிடமே கேட்டுக்கொள்கிறார் (உருமாற்றம்).கொக்கை நாம் ஒரு சித்தாந்தமாகவோ இன்னொரு மனிதனாகவோ மாற்றிப் பார்க்கலாம்.சித்தாந்தங்களின் மீதும் மனிதர்களின் மீதும் நமக்கு உருவாகும் பிம்பம் காலம் தோறும் மாறியபடி இருக்கிறது.சிறுவயதில் இருந்த தாய் என்ற வார்த்தையின் பிம்பம் அல்ல இன்றிருக்கும் எனது பிம்பம்.அதனால் தான் யுவன் தன் விலாசத்தை தீர்மானத்தின் ஆணிகள் அறையப்படாத சவப்பெட்டி என்று என் கபாலத்தைச் சொல்லலாம் நீங்கள் என்கிறார் ( விலாசம் ).ஆனால் அவர் கருத்தியலின் குழப்பங்கள் தேவையில்லை என்று புரிந்து நெருப்பின் செயல் திறனும் பெளதீகப் பயன்பாடும் போதுமென்று விலகும்போது ஜ்வாலையின் நாட்டியம் உள்ளே ஒரு கனப்பை உருவாக்குகிறது.(ஜ்வாலையின் நாட்டியம்).

அதே நேரத்தில் பெண் விடுதலையை முன்னிட்டோ ஆணின் விடுதலையை முன்னிட்டோ நடக்கும் ஊர்வலத்தில் தன்னை இணைத்துக்கொள்ள இயலாமல் நவீன யுவன் ஊர்வலம் முடிந்த வெளியில் ஒர் அனாதையாக தனிமையின் போதையில் நிற்கிறான்(ஊர்வலம்).குழம்பிப்போய் கருத்துகளோடு ஒன்றவும் முடியாமல் விலகவும் முடியாமல் விகாரமாய் விழுந்து கிடக்கும் அரக்கியின் தொடையென நீண்டு பரந்த தெருவில் மழைக்குச் சுவரண்டின ஆட்டுக் குட்டிகளுடன் தனியனாய் நிற்கிறான் நவீன யுவன்( தனிமை - இந்த முறை ஆட்டுக் குட்டிகளோடு)

காலத்தை ஒரு நீண்ட நேர்க்கோடாக பார்க்கலாம்.ஒரு சுழற்சியாக பார்க்கலாம்.காலமற்ற வெளியாக பார்க்கலாம்.காலம் இடமாக காட்சி அளிக்கலாம்.நாம் வரையறுத்து வைத்திருக்கும் மூன்று காலங்களுக்கு வெளியே தன்னை நீட்டித்தும் கொள்ளலாம்.யுவன் ஒரு கண்ணாடியில் தன் குறுந்தாடியை சரிசெய்கிறார்.கைதவறி கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கிவிடுகிறது.பாரத்துக்கொண்டிருந்த கண்ணாடி - கீழே விழும் போது - பாரத்துக்கொண்டிருக்கிறார் யுவன் கீழே விழுந்து நொறுங்கும் கண்ணாடியை.(நீட்சி).இங்கே காலத்தின் இறுக்கமான கோடுகள் தளர்கின்றன.நிகழ்வு நாம் வரையறுத்து வைத்திருக்கும் கோடுகளுக்கு வெளியே தன்னை நிகழ்த்தி ஒரே நிகழ்வாக மாறுகிறது.

யுவனுக்கு பிடிக்கும் என்றறியாமலே ஒலியெழுப்புகின்றன பறவைகள் , சித்தனின் ஆசியென தலையை வருடி வீழ்கிறது அருவி, அவர் விழித்து எழாத போதும் விடிந்து விடுகிறது பொழுது.கவிதையின் கணமொன்றைக் கண்கள் துழாவ காலடியில் பாய்ந்து மறைகிறது கணங்களின் பிரவாகம்.( பிரவாகத்தில் ஒரு துளி )

ஒரே நேரத்தில் ஒரே உலகத்தில் வெவ்வேறு இடங்களில் பல சம்பவங்கள் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.யுவன் தன் சிறுகதையை ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பவதற்காக தபால் நிலையம் சென்றுகொண்டிருக்கிறார்.அப்போது லாரிச்சக்கரத்தில் சிக்கி அரைப்படுகிறது ஒரு பன்றி.நிர்யணம் பெறாத புதிர்க் கணங்களொன்றில் அந்த பன்றி மரணத்தை நோக்கியும் யுவன் போஸ்ட்டாபீஸை நோக்கியும் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் அந்த பன்றி அங்கே லாரிச்சக்கரத்தில் அரைப்படுவதற்கும் யுவன் தபால் நிலையம் விரையும் போது அதை பார்பதற்கும் இந்த பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்.ஒட்டுமொத்த உலகமும் ஒரு நிகழ்வாக அங்கே மாறுகிறது.மேலே பிரவாகத்தில் ஒரு துளி கவிதையில் சொல்லப்படுவது போல அதுவே காலடியில் பாய்ந்து மறையும் கணங்களின் பிரவாகம்.

ஆனால் இந்த மனிதன் பன்றியும் தானும் பிரவாகத்தின் ஒரு துளி என்று எண்ணியவாறு செயல் அற்று நிற்க முடியாது.இன்றைய நாள் இன்னொரு நாள் தான்.ஆனால் அந்த இன்னொரு நாளில் சில வரிகளை படித்தாக வேண்டும்.சில ஸ்வரங்களை கேட்டாக வேண்டும்.முத்தம் கொடுத்தாகத்தான் வேண்டும்.கடன்கள் உயிர்ப்பு பெறுகின்றன.இது இன்னொரு நாளாக மாறும் தான் என்றாலும் இன்றைய நாளுக்கான செயல்கள் நவீன யுவனுக்கு பயமாகத்தான் இருக்கிறது.(இன்று).

கருத்தியல்களின் மீது தீவிரமான அவநம்பிக்கையை கொண்டிருக்கிறான் இன்றைய மனிதன்.தான்டவ மூர்த்திக்கு காலில் சுளுக்கு தொடங்கிவிட்டது.சிலுவை ஏந்தியவன் இழைப்புளியும் கையுமாய் சிலுவையிலிருந்து இறங்கி போனான்.விடுதலை பற்றி பேசிய கிழவன் காணாமல் போய்விட்டான்.சிறைப்பட்ட ராணியை மீட்க கணிப்பொறியில் போராடுகிறான் இன்றைய நவீன யுவன்.இன்றைய காலத்தில் தலைகீழாய் நடக்கும் மனிதர்களை பார்த்து நகைக்கின்றன வெளவால்கள்(வேறொரு காலம்).

ஒரே சமயத்தில் நிகழும் பல்வேறு மெய்மைகளை எண்ணியவாறு இருக்கும் நவீன யுவன் , கருத்தியல் குறித்த ஆழ்ந்த அவநம்பிக்கையால் தனித்துவிடப்படும் நவீன யுவன், தன் தினசரி வாழ்க்கைக்கு வெளியே கருத்தியல் தளத்தில் செயல் வடிவமாக எதை செய்கிறான்.

உறைபனிச்  சரிவில்
விறைத்த
வீரனின் பிரேதக்
கண்களில் மிச்சமிருக்கிறது
பூமியல் எங்கும்
வரையப்படாத கோடு.
அணுவை
அணு புணர்ந்து
எழும்பிய
நாய்க்குடைக் காளான்களின்
நிழலில்
வசித்தல் மறுத்து
இறுதி உயிரும்
நீங்கின பிற்
மீந்த
முப்பரிமாண வரைபடத்தின்
குறிக்கப்படாத மூலையில்
ஒதுங்கி நின்றிருந்தேன்
'என்னதான் நடக்கிறது' என
வேடிக்கை பார்த்த
வாறு.

இடமற்ற காலத்தில் என்னதான் நடக்கிறது என வேடிக்கை பார்த்தவாறு நிற்கிறான் நவீன யுவன்.ஒரே நிகழ்வாக அனைத்தும் மாறும் காலத்தில் தாண்டவமூர்த்திக்கு சுளுக்கு தொடங்கி விடும் காலத்தில் வாழும் நவீன யுவன் ஒரு கையறு நிலையில் தனிமையில் 'என்னதான் நடக்கிறது' என வேடிக்கை பார்த்தவாறு நிற்கிறான்.

                    - இன்மை இதழில் எழுதிய ஆசிரியர் பக்க கட்டுரை