பெருங்கருணை





பஷீரின் அனைத்து ஆக்கங்களிலும் அநேகமாக ஏதோ ஒரு வயோதிகர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து சர்பத் அருந்தியவாறு தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களின் பாவனைகளையும் பாசாங்குகளையும் வேடிக்கை பார்த்தவாறு இருக்கும் தோற்றம் கிடைக்கிறது.தாராசங்கர் பந்தோபத்யாயாவின் ஆரோக்கிய நிகேதனம் நாவலிலும் இந்த தொனியை பார்க்கலாம்.தமிழில் கி.ராவிடம் இந்த தொனி இருக்கும்.

பஷீரின் ஏதோ ஒரு புத்தகத்தில் ஒரிடத்தில் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் , அதில் எனது பங்கு இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பது போல ஒரு வரி வரும்.பஷீர் பற்றி எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ஒரு கட்டுரையில் பஷீரை பற்றிய ஒரு நிகழ்வை சொல்கிறார்.பஷீர் ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு காசு கொடுக்க பார்க்கும் போது அவரின் பர்ஸ் தொலைந்துவிட்டது என்பதை உணர்கிறார்.கல்லாவில் இருப்பவன் பஷீரின் ஜிப்பாவை கழற்ற சொல்கிறான்.பஷீர் ஏதும் புரியாத நிலையில் இருக்கும் போது அவர் அருகில் ஒருவன் வந்து பஷீர் கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்திவிட்டு அவரை வெளியே அழைத்துவருகிறான்.சிறிது தூரம் வந்தபின் பல பர்ஸ்களை காட்டி இதில் உன்னுடையதை எடுத்து கொள் என்று சொல்கிறான்.அவன் சிறுது தூரம் சென்றபின் அவன் பெயரை கேட்கவில்லையே என்று நினைத்துகொள்கிறார்.ஒரு வேளை கருணை என்று இருக்குமோ என்று எண்ணுகிறார்.அதாவது மனிதர்கள் இயல்பில் கீழ்மையும் தீமையுமான குணங்களால் ஆனவர்கள்.அங்கிருந்து பார்க்கும் போது அந்த மனிதர் பஷீருக்கு செய்தது பெருங்கருணை தான்.நம்மால் பிறருக்கு பெரிய தொந்தரவுகள் இல்லாமல் வாழ முடிந்துவிட்டாலே அது சிறந்த வாழ்க்கைதான்.நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்றால் நம்மால் இப்படிதான் இருக்க முடியும்.நமது அன்பு, பாசம், புரட்சி , காதல் எல்லாவற்றையும் தோல் உரித்து பார்த்தால் அதில் நாம் மட்டும் தான் இருப்போம்.கடவுள் இல்லை , சாத்தானும் இல்லை.தந்தை , தாய், சகோதர சகோதரிகள், நண்பர்கள், காதலி,பிள்ளைகள் எல்லாம் ஒரு வகையில் நாம் மட்டும் தான்.நமது உடலின் நீட்சி.அவ்வளவே.ஏந்த புனிதமும் இல்லை , ஏந்த அறமும் இல்லை.அதாவது நாம் இப்போது அறம் பிறழ்ந்த சமூகத்தில் வாழவில்லை.நாம் எப்போதும் இப்படியே இருந்திருக்கிறோம்.இப்போதும் இப்படித்தான் இருக்கிறோம்.எப்போதும் இப்படித்தான் இருப்போம்.இலங்கையில் நிகழ்ந்த போரின் போது தன் உடலின் ஒரு உறுப்பு துண்டிக்கப்பட்டது போல உண்மையிலேயே துடித்த மனிதர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்.நிச்சயம் என் துயரம் அந்தளவுக்கு இல்லை.நான் ஒரு இரவு கூட அந்தரங்கமாக கண்ணீர்விட்டு அழவில்லை.நந்திகிராம் நிகழ்வின் போது நான் கொஞ்சம் வருத்தப்பட்டேன்.அது என் லட்சியம் தோற்றுபோனதின் வருத்தமே தவிர மனித உயிர்களின் மரணத்தில் உருவான துயரம் அல்ல.நமது லட்சியங்களுக்காக , நமது சொந்தங்களுக்காக நமது நண்பர்களுக்காக என்று இல்லாமல் நம்மால் வாட முடியும் என்று தோன்றவில்லை.வள்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார்.அருட்பெருட்ஜோதி அருட்பெருட்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருட்ஜோதி என்பதே வள்ளலாரின் ஆன்மிகம்.அந்த தனிப்பெருங்கருணை தான் வடலூரில் வயிற்று பசி தீர வருவோருக்கு அண்ணமிடும் எரிதழல்.இன்று இங்கே நின்று பார்க்கும் போது அந்த மனவிரிவு , அந்த ஆன்மிகம் எல்லாமே எட்ட முடியாத தொலைவில் எங்கோ இருப்பது போல இருக்கிறது.இத்தனைக்கும் வடலூர் சபை நான் பிறந்து வளர்ந்த நெய்வேலி பெரியாகுறிச்சியிலிருந்து ஐந்து கீலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது.