என் பால்ய காலத்தின் மனிதர்




பால்ய காலத்தில் நெய்வேலியில் இருந்தபோது சில விடுமுறைகளின் போது பண்ருட்டியிலிருந்த என் சித்தப்பா வீட்டில் சென்று நாங்கள் தங்குவது வழக்கம்.என் சித்தப்பா பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர சபை செயலாளராக இருந்தார்.சிலர் அவரை தலைவரே என்று கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன்.வீட்டில் இரண்டு அடி அகலமும் ஒரடி நீளமும் கொண்ட லெனின் , மார்க்ஸ், ஸ்டாலின் புகைப்படங்களும் அதில் ஏதோ வாசகங்களும் இருக்கும்.சமயங்களில் கட்சி கூட்டத்திற்காக அவருடைய வீட்டிற்கு வெளியே கம்பங்களை கிடத்தி அதில் கட்சி கொடியை கட்டிக்கொண்டிருப்பார்கள்.ஏதோ ஒரு வகையில் கம்யூனிஸ்ட்கள் என்றால் நல்லவர்கள், நேர்மையானவர்கள், எளிமையானவர்கள் என்ற பிம்பம் அப்போது மனதில் பதிந்துவிட்டது.ஒரு கட்டத்தில் கட்சியில் சேரலாமா என்ற எண்ணம் இருந்தது.இந்த பிம்பம் அநேகமாக 2007யில் என்னுடைய இருபத்தியைந்தாவது வயது வரை இருந்தது.அப்போது மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த நந்திகிராம் சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது.அப்போது வாசித்த ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் புத்தகம், லட்சியவாதங்களுக்கு பின்னால் இருக்கும் கோர முகம் என்று பல விஷயங்கள் பயங்கரமாக குழப்பிவிட்டது.அதன்பிறகு சிறிதுசிறதாக கம்யூனிஸம் போன்ற விஷயங்களின் மீதிருந்த ஒரு ஈர்ப்பு போய்விட்டது.ஆனால் இப்போதும் நான் வாக்களிக்கும் தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் நின்றால் அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவேன்.அநேகமாக 2007யில் நிகழ்ந்த கயர்லாஞ்சி சம்பவம் என்னை இன்னொரு வகையில் பயங்கரமாக உலுக்கிவிட்டது.அந்த சம்பவம் , அந்த கிராமத்து மனிதர்கள், உயர் சாதி பெண்கள் அதை வேடிக்கை பார்த்தது என்று மனிதர்கள் மீதான நம்பிக்கையெல்லாம் தகரும் முதல் தருணமாக அது இருந்தது.

என் சித்தப்பா சென்ற வாரம் மரணமடைந்தார்.இயற்கை மரணம். பண்ருட்டியில் அவருடைய வீட்டில் ஒரு கட்டத்தில் ஒன்றோ இரண்டோ பசுமாடுகள் இருந்தன.பேரிங் வியாபாரம் வெகு ஜோராக சென்றுகொண்டிருந்தது. இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை.நிம்மதியான குடும்ப வாழ்க்கை.விவசாய நிலங்கள் வாங்கினார்.அவரின் கடையில் நான்கைந்து நபர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.கட்சியில் நல்ல பொறுப்பு..அந்த காலகட்டம்தான் அவர் வாழ்வின் பொற்காலம்.அவரும் என் தந்தையும் இளமையில் மிகவும் வறுமையில் இருந்தனர்.முதலில் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை என்ற ஊரில் இருந்தார்கள்.பின்னர் பண்ருட்டி  வந்தார்கள்.என் தந்தை சட்டம் படிக்க வேண்டும் என்பதற்காகவே ஐஸ் பேக்டரி வைத்து இருவரும் நடத்தினார்கள்.பின்னர் பேரிங் வியாபாரம்.என் தந்தையின் திருமணம்.ஏதோ மனகசப்புகளால் என் தந்தை நெய்வேலி வந்துவிட்டார்.மிகவும் வறுமையிலிருந்து ஒரளவு நல்ல நிலைமைக்கு வந்த என் சித்தப்பாவிற்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது.அதிலிருந்துதான் அவரின் பொருளாதார சரிவு ஏற்பட்டது.மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்டது.நோய்மை அளிக்கும் மனகசப்புகளால் அவரின் வாழ்க்கை நோக்கு மாறிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.பின்னர் அதிலிருந்து வெளியே வந்து ஒரளவு நன்றாகத்தான் இருந்தார்.ஆனால் பொருளாதார ரீதியாக அவரால் மீளவே முடியவில்லை.ஒரு வகையில் அவருடைய வாழ்க்கை மிகப்பெரிய வாழ்க்கைதான்.சிலம்பம் கற்றிருந்தார்.வீட்டில் சாட்டை வைத்திருந்தார்.பெரிய மீசை வைத்திருப்பார்.மிகவும் இறுக்கமானவர்.அநேகமாக எப்போதும் வேஷ்டிதான் அணிந்திருப்பார்.அவர் என்னிடம் எப்போதும் பெரிதாக பேசியதாக எனக்கு நினைவில்லை.

கெடிலம் ஆற்றின் நதிக்கரையில் அவர் உடல் எரியூட்டப்பட்டது.தீ சட்டென்று வைக்கோலை பற்றிக்கொள்கிறது. ஒரு மனிதினின் உடல் எரிகிறது.முப்பதே வருடங்கள் நிரம்பிய என் வாழ்க்கையில் மனிதர்கள் மீதும் சித்தாந்தங்கள் மீதும் கடவுள் மீதும் எந்த நம்பிக்கையும் அற்ற ஒரு இருண்ட பிரதேசத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.என் பால்ய காலத்தில் லட்சிய வாழ்க்கையின் மீதும் நன்நெறிமீதும் எளிமை மீதும் ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பை உருவாக்கிய அந்த மனிதரை நினைத்துக்கொள்கிறேன்.அந்த நாட்களின் அறியாமை என் வாழ்க்கையை மறுபடியும் பற்றிக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அது ஒருவகையில் நான் அவர் மீள் எழுந்து வர வேண்டும் என்று நினைத்துக்கொள்வது போலத்தான்.என் வாழ்க்கையில் ஒளி நிரம்பிய காலத்தில் நான் பார்த்து வியந்த ஒரு மனிதர் மறைந்துவிட்டார்.அவருக்கு என் அஞ்சலி.

ஆயுதங்களுக்கு விடைகொடுத்தல்






A Farewell to Arms என்ற ஹெமிங்வேவின் நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஹென்றியும் ஆல்பர் காம்யூவின் மெர்சால்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.மெர்சால்ட்டிடம் ஒரு தத்துவ சாய்வு உண்டு.ஹென்றி அப்படி எந்த தத்துவ கனமும் இல்லாத தூய உயிரியல் பிண்டம்.ஹென்றி ரெட் வைன் அருந்துகிறான்.காபி மெல்கிறான்.ஆற்றில் மீன் பிடிக்கிறான்.தன் கட்டளைக்கு அடிபணியாத என்ஜினியர்களை சுடுகிறான்.ஒரு முறை அவனுக்கு பால்வினை நோய் வந்திருக்கிறது.காதலிக்கிறான்.புணர்கிறான்.நன்றாக உண்கிறான்.உறங்குகிறான்.தன் உயிருக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு தருணத்திலும் அதிலிருந்து தப்பிக்கும் அதீத உயிர் இச்சை கொண்டவனாக இருக்கிறான்.தன் குழந்தையும் காதலியும் இறந்துபோகும் போது வயிற்றில் ஒரு வெற்றிடத்தை உணர்கிறான்.இந்த நாவலில் ஒரிடத்தில் ஹென்றி நினைக்கும் ஒரு வரி முக்கியமானது.நான் இங்கே இருப்பது கேத்ரீனுடன் சேர்ந்து உண்பதற்கும் உறங்குவதற்கும் தான்.சிந்திப்பதற்கு அல்ல.தன் இறந்து பிறந்த ஆண்குழந்தையை பற்றி நினைக்கும் போது ஆம், இங்கே எல்லோரும் கொல்லப்படுகிறார்கள்.நாம் எதையும் கற்றுக்கொள்வதற்கான நேரம் இருப்பதில்லை.அல்மோ போல சுடப்பட்டு இறந்துபோகலாம்.நண்பன் ரினால்டி போல சிபிலஸால் கொல்லப்படலாம்.நீங்கள் இங்கே இருந்தால் போதும் , எப்படியும் கொல்லப்படுவீர்கள்.ஹென்றி மரணத்தை இறப்பாக பார்க்கவில்லை.கொல்லப்படுவதாக பார்க்கிறான்.ஒரு வேட்டையாக.இயற்கையின் வேட்டை.சகமனிதர்களின் வேட்டையாக.

பிரெட்ரிக் ஹென்றி ஒரு அமெரிக்கன்.இத்தாலியில் முதலாம் உலகப்போரின் போது முதலுதவி ஊர்தியின் அதிகாரியாக பணிபுரிகிறான். ஹென்றிக்கும் அவனின் அறை நண்பனாக வரும் ரினால்டிக்குமான நட்பு மிகவும் நெகிழ்ச்சியானது.ரினால்டி மருத்துவன்.அங்கே ஒரு மருத்துவமணையில் செவிலியராக இருக்கும் கேத்ரீன் என்ற பெண்னை ஹென்றி காதலிக்கிறான்.முதலில் ரினால்டிதான் கேத்ரீன் மீது ஈர்ப்பு கொள்கிறான்.அவளை அறிமுகம் செய்து வைப்பதற்காக ஹென்றியை அழைத்து செல்கிறான்.முதல் சந்திப்பிலேயே கேத்ரீனுக்கு ஹென்றிமீது பற்று ஏற்பட்டுவிடுகிறது.பின்னர் காதல்.ஹென்றி போரின் போது காலில் காயப்பட்டுவிடுவதால் மிலன் நகரில் மருத்துவமணையில் அனுமதிக்கப்படுகிறான்.அங்கு கேத்ரீனுடன் நிறைய நேரம் செலவழிக்க முடிகிறது.இறுதியில் அவன் மருத்துவமணையிலிருந்து போர் முனைக்கு திரும்பும் போது கேத்ரீன் மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.அங்கே இத்தாலி படைகள் தோற்றுவருவதால் பாசறைக்கு திரும்புகிறார்கள்.அப்போது நிகழும் பல சம்பவங்களின் ஊடாக ஹென்றியுடன் வரும் அல்மோ சுடப்படுகிறான்.   தன் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை என்ற காரணத்தால் என்ஜினியர்கள் இருவரை ஹென்றி சுடுகிறான்.பின்னர் தான் தனது துருப்புகளை விட்டுவிட்டு தனியே சென்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சுடப்படலாம் என்று தெரிகிறபோது நதியில் குதித்து தப்பிக்கிறான்.கேத்ரீனை சந்திக்கிறான்.இருவரும் சுவிஸர்லாந்தில் தங்குகிறார்கள்.ஹென்றி கேத்ரீன் விரும்புகிறாள் என்பதால் தாடி வளர்க்கிறான்.கேத்ரீனிக்கு பிரசவ வலி எடுக்கிறது.மருத்துவமணையில் சேர்க்கிறார்கள்.கேத்ரீனால் குழந்தையை வெளிய தள்ள முடியாததால் சிசேரியன் செய்கிறார்கள்.சேய் இறந்து பிறக்கிறது.கேத்ரீனுக்கு நிறைய இரத்தப்போக்கு இருப்பதாக செவிலியர் சொல்கிறார்.ஹென்றி வெளியில் அமர்ந்து கடவுளிடம் பிராத்திக்கிறான்.தான் எதை வேண்டுமானாலும் செய்வதாக சொல்கிறான்.குழந்தையை எடுத்துக்கொண்டாய்.கேத்ரீனை எடுத்துக்கொள்ளாதே.உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று இரைஞ்சுகிறான்.கேத்ரீன் இரத்தப்போக்கால் இறந்துவிடுகிறாள்.இறந்துபோன தன் காதலியின் அறையில் நிற்கும் போது ஒரு சிலை அருகே இருப்பது போல உணர்கிறான்.சட்டென்று தன் ஒட்டல் அறை நோக்கி அந்த மழை இரவில் நடந்து செல்கிறான்.

ஹென்றி ஒரு முறை கேத்ரீனை அவள் வேலை செய்யும் மருத்துவமணையில் பார்க்க வருகிறான்.அப்போது அவள் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் பார்க்க இயலவில்லை.திரும்பும் போது வெறுமையாகவும் காலியாகவும் உணர்கிறான்.இத்தாலிய படைகள் பாசறைக்கு திரும்பும் தருணத்தில் ரினால்டி சிபிலஸ் நோய் இருக்குமோ என்ற அச்சத்தில் இருப்பதை அறிகிறான்.பின்னர் அதைப்பற்றி நிணைத்துப்பார்க்கும் போது நோய் முதலிலேயே கண்டிறியப்பட்டால் குணப்படுத்திவிடலாம்.ஆனால் அச்சமும் வருத்தமும் இருக்கத்தான் செய்யும்.எனக்கு இருந்தால் நானும் வருத்தப்படுவேன் என்று நினைத்துக்கொள்வான்.எதன் மீதும் பற்றற்ற ஒரு தூய உயிரியல் பிண்டமாகவே ஹென்றி இருக்கிறான்.ஒரு முறை அவனுடன் இருக்கும் ஒரு பாதிரியார் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்பார்.இல்லை என்பான்.எப்போதும் இருந்ததில்லையா என்று பாதிரியார் கேட்பார்.இரவுகளில் சில நேரம் நிணைத்துக்கொள்வதுண்டு என்பான்.அப்போது பாதிரியார் அது அச்சத்தாலும் காமத்தாலும் வரக்கூடிய ஒன்று என்பார்.அவனுக்கு தேசம் குறித்தோ , கடவுள் குறித்தோ ,சக மனிதர்கள் குறித்தோ பற்றுதல் இல்லை.ஒரு வேட்டையாக உலகை பார்பவனாக இருக்கிறான்.ஆல்பர் காம்யூவின் மெர்சால்ட் தன் இறப்புக்கு முந்திய தருணத்தில் அவனுக்காக பிராத்திக்க வரும் பாதிரியாரின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவான்.அந்த இடத்தில் ஹென்றி இருந்தால் மிகவும் அச்சத்தோடு இருந்திருப்பான்.முடிந்தால் தப்பித்திருப்பான்.ஒரு போதும் வாழ்வதற்கான இச்சையை அவன் விட தயாராக இல்லை.பாதிரியாரை வெளியே தள்ளியிருக்க மாட்டான்.அவரை பிராத்தனை செய்ய அனுமதித்திருப்பான்.தப்பிப்பதற்கான வழியில்லையென்றால் அந்த பிராத்தனை குறித்த எந்த அலட்டலும் இல்லாமல் அச்சத்தோடு புகைபிடித்துக்கொண்டிருப்பான்.மெர்சால்ட் இந்த வாழ்க்கையை அபத்தமாக பார்க்கிறான்.ஹென்றி அபத்தமாக பார்க்கவில்லை.தான் வேட்டையாடப்படுவதாக நினைத்தவாறு அச்சத்தோடு உறங்கபோவான்.

இந்த நாவலை படித்த போது சமீபத்தில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்ப்பில் படித்த 'பெயரற்ற யாத்ரீகன் - ஜென் கவிதைகள்' என்ற தொகுப்பில் உள்ள ஒரு கவிதைதான் நினைவுக்கு வந்தவாறு இருந்தது.

உண்கிறோம் கழிக்கிறோம்,
உறங்குகிறோம்,விழிக்கிறோம் -
இதுதான் நம் உலகம். இதன் பிறகு
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
ஒன்றுதான்.
இறப்பது.

                                                                           - இக்யு ஸோஜன்


A Farewell to Arms - Ernest Hemingway.