மானுடம் வெல்லும்



1735ம் ஆண்டிலிருந்து 1740 வரை புதுச்சேரியை ஆண்ட குவர்னர் துய்மா துரையின் காலத்தில் புதுச்சேரி , தஞ்சை , திருச்சி , ஆற்காடு , மராத்தியர் அரசாங்களை பற்றிய ஒரு குறுக்குவெட்டு பார்வை என்று மானுடம் வெல்லும் நாவலை பற்றி சொல்லலாம்.துரை துய்மாவின் சின்ன துபாஷியான  ஆனந்தரங்கப் பிள்ளை நாள் தோறும் எழுதிய நாட்குறிப்புகளில் 1735யிலிருந்து 1742வரையான நாட்குறிப்புகளின் தொகுப்பே இந்த மானுடம் வெல்லும். இதில் முக்கியமாக பதிவாகியிருப்பது காரைக்கால் மற்றும் அதை சுற்றிய ஊர்கள் எப்படி புதுச்சேரி வசமானது என்ற வரலாறு, மதுரையை ராணி மீனாட்சி அம்மாளிடமிருந்து ஏமாற்றி பறித்த சந்தா சாயபு என்ற ஆற்காடு நவாபின் மருமகன் பற்றிய வரலாறு, தஞ்சையை ஆண்ட காட்டு ராஜா சித்துஜி அவரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் சாயாஜி மன்னர் பற்றியும் அவரை கொன்று ஆட்சியை கைப்பற்றும் பிரதாப் சிங்கின் வரலாறும், இந்த மூன்று நிலங்களின் எளிய மக்களின் வரலாறும் சேர்ந்தது தான் பிரபஞ்சன் எழுதிய நாவல் மானுடம் வெல்லுமின் சாரம்.இந்த நாவலை அவர் வெறும் அரசியல் விளையாட்டுகளை பற்றியதாக மட்டுமானதாக எழுதியிருக்கலாம்.அது எளிதும் கூட. ஆனால் கோகிலாம்பாள் எனும் தாசியிலிருந்து , வெள்ளைபூண்டு என்ற விவசாயிலிருந்து , குருசு , வரதன் என்ற ஊழியனிலிருந்து பல சிறு சிறு கதாபாத்திரங்களாக வரும் எளிய மனிதர்கள் வரலாறும் இதில் பதிவாகியிருக்கிறது.அதுவே இந்த நாவலின் பலம்.ஏன் பிரபஞ்சன் இப்படி செய்தார் என்பதற்கு அவரே முன்னுரையில் விளக்கம் அளித்துள்ளார்.வரலாறு என்பது சாமான்ய மக்களின் கதை என்று. இது ஒரு மார்க்சியப் பார்வை. வரலாறு என்பது ஆட்சியாளர்களின் காலங்களை பிரிப்பது அல்ல.அது எளிய மக்களின் வாழ்க்கையில் இருக்கும் உற்பத்தி உறவுகள் , உற்பத்தி சக்திகளை பற்றிய ஆவணமே என்று கோசாம்பி முதலான மார்க்சிய வரலாற்றாசியர்கள் சொல்ல ஆரம்பித்தனர். கோசாம்பி ஒர் இடத்தில் இந்த மார்க்சியப் பார்வையை ஏன் உபயோகபடுத்துகிறேன் என்றால் இது வேலை செய்கிறது என்பதால் தான் என்கிறார்.ஆட்சியாளர்களின் மாற்றமும் , ஆட்சி மாற்றமும் சாமான்யன் வாழ்க்கையில் எந்த உற்பத்தி முறையிலான மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பதே உண்மை.இந்த பார்வையை பிரபஞ்சன் ஏற்றுக்கொண்டு தன் படைப்பில முயன்றிருக்கார் என்பதே இந்த நாவலின் வெற்றி. ஆனால் இது முழுமையான வெற்றியா என்கிற போது ஒரு கேள்வி எழுகிறது. பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகளை அடிப்படையாக வைத்தே தன் நாவலை எழுதியிருக்கார்.ஆனால் அதிலிருந்து சிறிதளவு கூட தகவல்களில் பிசிறி விடக்கூடாது என்று பிரபஞ்சன் பதறியிருக்கார் என்பதாக படுகிறது.இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக அவர் செயல்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நாவலின் முக்கியமான தரிசனமாக எனக்கு படுவது இதுதான். நாம் இருத்தலியம் என்கிறோம், மறுப்புவாதம் என்கிறோம் , ஆனால் அந்த காலத்தில் போர்களின் போது எளிய மனிதர்கள் எந்தளவு பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒரு தரிசனம் மேலெழுந்து வருகிறது.நேற்றைய மனிதர்கள் ஏதோ கிராமங்களில் எழில்சார்ந்த சூழலில் சுகமாக வாழ்ந்தார்கள் என்ற எண்ணம் பரவலாக எல்லோருக்கும் இருக்கிறது. அது எத்தனை முட்டாள்தனமானது என்று மானுடம் வெல்லும் நாவல் பல்வேறு வாழ்க்கைகள் முழுமாக தொடர்ந்து நிரூபித்திருக்கிறது.எழில் நிறைந்த கிராமிய சுழல்கள் எப்படி சுரண்டல் நிறைந்ததாக இருந்தது என்பதும் அடிமைகள் பண்டங்கள் போல மாற்றப்பட்டார்கள் என்பதும் மிக முக்கியமான ஆவணங்கள்.மிக முக்கியமான வரலாற்று நாவல்.பிரபஞ்சனின் உழைப்பு வணக்கத்திற்குரியது.



மானுடம் வெல்லும் - எழுத்தாளர் பிரபஞ்சன் - கவிதா வெளியீடு.

புதிய விழுமியங்கள்






                                                                         1

 
ஸ்ரீனிவாசராவ் மனம் விம்மி அழுது கொண்டிருந்தான்.ராஜன் அவனை சமாதானம் செய்யாமல் வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஸ்ரீனிவாசராவ் மறுபடி மறுபடி நான் பெறும் தவறு இழைத்து விட்டேன் என்று புலம்பிக் கொண்டிருந்தான்.கொஞ்ச நேரம் ராஜன் அமைதி காத்தான்.பின்னர் மிகவும் கோபமாக அப்படி என்னத்தான் செய்து விட்டாய் என்று கத்தினான். ஸ்ரீனிவாசராவ் அழுகையை நிறுத்தினான்.

நான் செய்தது தவறல்லவா?

என்ன தவறு செய்தாய்.

நான் வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்த காலத்தில் என் மீது பரிதாபப்பட்டு அக்கறை கொண்டு என்னை தன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து கொண்ட மனிதருக்கு துரோகம் செய்து விட்டோம் என்று நினைக்கையில் மனம் விம்முகிறது.அவருக்கு எதிராக தொழில் தொடங்கும் எண்ணம் என் மனதில் எப்படி முளைத்தது என்றே எனக்கு தெரியவில்லை.இன்று நான் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்று செல்கையில் மேற்கொண்டு என்ன செய்ய விருப்பம் என்று அவர் கேட்ட போது நான் இந்த தொழிலை தனியாக ஆரம்பிக்க போகிறேன் என்று சொன்ன போது அவர் என்னை பார்த்த பார்வை இருக்கிறதே.இப்படிப்பட்ட துரோகத்தை உன்னால் எப்படி செய்ய முடிந்தது என்று கேட்காமல் கேட்டார்.

நீ ஒரு பைத்திக்காரன் என்றான் ராஜன்.

ஏன் அப்படி சொல்கிறாய்.அவருக்கு நான் துரோகம் இழைத்து விட்டது உண்மைதானே.

நீ சொல்வது விசுவாசம் என்ற விழுமியம்.இந்த விசுவாசம் என்ற விழுமியத்திற்கு நவீன முதலாளித்துவ காலத்தில் சுத்தமாக இடமில்லை. இந்த விசுவாசம் , உன்னதமாக்கல் போன்ற விழுமியங்கள் எப்போதோ காலவாதி ஆகிவிட்டன.இன்று சந்தை தான் எஜமான். திறமை கொண்ட எவர் வேண்டுமானாலும் அதில் போட்டி போடலாம். யாரும் தடுக்க முடியாது.

அப்படியென்றால் எல்லா விழுமியங்களும் இறந்துவிட்டனவா.

நிலப்பிரத்துவ காலத்து விழுமியங்கள் எல்லாம் எப்போதோ இறந்துவிட்டன.

ஸ்ரீனிவாசராவ் மேற்கொண்டு அழவில்லை. அப்போது ஸ்ரீனிவாசராவ் பார்க்க ஒருவன் வந்தான்.தன்னை அஸ்வத்தாமன் என்று அறிவித்துக்கொண்டான். ஸ்ரீனிவாசராவ் அஸ்வத்தாமனும் தன்னோடு தொழிலில் ஈடுபடபோவதாக ராஜனிடம் சொன்னான்.ராஜன் மிக்க மகிழ்ச்சி என்று அஸ்வத்தாமனிடம் கை குலுக்கினான்.

ஸ்ரீனிவாசராவ் தான் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று சொல்லி அஸ்வத்தாமனிடம் ராஜனுடன் பேசி கொண்டியிருக்கம்படி சொல்லி கிளம்பினான்.

ராஜன் ஸ்ரீனிவாசராவ் சென்றபின் அஸ்வத்தாமனிடம் ஸ்ரீனிவாசராவ் அழுது கொண்டிருந்த விஷயத்தையும் சொன்னான்.இருவரும் மகிழ்ச்சியாக சிரித்துகொண்டார்கள்.

                                                                         2

 
ராஜன் சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தான். மனித சடலம் தான். சற்று நேரத்துக்கு முன்வரை அவன் ஆரோக்கியமாக இருப்பது போலத்தான் இருந்தான்.நல்ல தேஜஸ் நிரம்பிய முகம். பார்க்கையில் அவன் தூங்குவது போல இருந்தது. ராஜன் இனி என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தான். பழகிய ஒரு மணிநேரத்தில் அவனது பெயரை மட்டும் அறிந்திருந்தான் அஸ்வத்தாமன் என்பது பெயர். காற்று பலமாக வீசியது. சடலம் அசைந்தது.ஒரு தீ பிளம்பு சுற்றி எழுவதுபோல அஸ்வத்தாமன் எழுந்து கொண்டான். ராஜன் பயந்து போனான். அப்படியென்றால் நீ இறக்கவில்லையா என்று அலறியபடி கேட்டான். நான் இறந்துதான் விட்டேன் என்று சாந்தமாக பதில் சொன்னான் அஸ்வத்தாமன். அப்படியென்றால் இப்போது எப்படி பேசுகிறாய்..? எப்படி யென்றால் நான் இப்போது உயிர்பெற்றுவிட்டேன். அது எப்படி சாத்தியம். ஏன் சாத்தியமில்லை என்று வினவினான் அஸ்வத்தாமன்.எழுந்து அறையின் குறுக்காக நடந்தான்.

இறந்து போயிருந்த இந்த கொஞ்ச நேரத்தில் நீ எங்கு சென்றாய்.

நான் எங்கும் செல்லவில்லை.செல்வதற்கு சொர்க்கம் நரகம் என்று ஏதேனும் இருக்கிறது என்று இன்னும் நினைத்துகொண்டிருக்கிறாயா.பைத்தியகாரா.

அப்படியென்றால் இந்த சில மணிநேரத்திற்கு உன் உயிர் எங்கு சென்றது?

அது எங்கும் செல்லவில்லை. ஏன் எல்லோரும் ஒருவன் இறந்து விட்டால் மேலேயே பார்க்கிறீர்கள். பூமியின் ஈர்ப்புவிசை காரணமாக ஏன் உயிர் கீழே செல்லகூடாது. நரகம் கூட மேலே தான் இருக்கிறதா? கிண்டலாக சிரித்தான் அஸ்வத்தாமன்.

நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை.அப்படியென்றால் சொர்க்கம் நரகம் என்று எதுவும் இல்லை என்கிறாயா.

ஆம்.

சரி.உயிர் பிரிந்தபின் உடலில் இருந்து அது எங்குத்தான் செல்கிறது.

உயிர் உடலைவிட்டு பிரிவதுமில்லை. சேர்வதுமில்லை.உடல்தான் உயிர்.உயிர்தான் உடல்.

ராஜன் திகைத்து போய் அமர்ந்திருந்தான்.

சொர்க்கம் நரகம் என்ற கருத்துலகங்கள் இல்லையென்றால் நல்லது தீயது என்ற கருத்துகளுக்கே அர்த்தம் இல்லையே.

ஆம்.இல்லை.

அப்படியென்றால் கடவுள்.

கடவுள் இறந்துதான் பலகாலம் ஆகிறதே.இன்னும் அவரை விடவில்லையா நீங்கள்.

அப்படியென்றால்..

அப்படித்தான்.கடவுள் இறந்துவிட்டார் என்பது ஒரு உண்மை. கடவுள் இறந்த சில காலம் கழித்து நல்லது தீயதுக்கான விழுமியங்களும் இறந்துவிட்டன.

இது எப்படி நிகழ்ந்தது.எனக்கு தெரியாதே. கடவுளை யார் கொன்றது.

நாம் தான்.

நாம்!

ஆமாம் நாமேதான்.

எப்படி.

விஞ்ஞானத்தின் மூலம்.

விஞ்ஞானம் எப்படி கடவுளை கொல்ல முடியும்.நீ என்னை குழுப்புகிறாய்.நீ ஒரு மூடன்.

நான் மூடன் அல்ல.நீங்கள் எல்லோரும் தான் மூடர்கள்.கடவுள் இறந்துவிட்டார். அவர் இறந்து நூற்றாண்டு கடந்துவிட்டது. விஞ்ஞானத்தின் துணைக்கொண்டு அவர் கொல்லப்பட்டார்.

விஞ்ஞானம் எப்படி கடவுளை கொன்றது என்கிறாய்.எனக்கு புரியவில்லை.

நீ ஒரு அசடன்.இன்னும் உனக்கு புரியவில்லையா. நல்லது தீயது என்ற அடிப்படை எதன் பெயரால் உருவாக்கப்பட்டது.

கடவுளின் பெயரால்.

விஞ்ஞானம் சிறிது சிறிதாக நல்லது மற்றும் தீயதின் விழுமியங்களை கடவுளிடமிருந்து பிடுங்கிவிட்டது. நல்லது தீயது பிடுங்கப்பட்டபின் நிராயுதபாணியான கடவுள் ஒரே அடியில் வீழத்தப்பட்டார்.

கடவுள் இறந்தபின்தான் நல்லது தீயது இறந்தது என்றாயே.

ஆம். அது ஒரு முரணியக்கம்.

அப்படியென்றால் இப்போது விழுமியங்களும் இல்லை கடவுளும் இல்லை என்கிறாயா.

ஆம்.அப்படித்தான்.

அப்படியென்றால் நாம் எதன் அடிப்படையில் வாழ்வது, நமக்கான அறமும் , விழுமியங்களும் இல்லையென்றால் நாம் பைத்தியகாரர்களாகிவிட மாட்டோமா.எனக்கு ஒன்றும் புரியவில்லை.என் உடல் நடுங்குகிறது. நான் அச்சம் கொள்கிறேன்.

நாம் இனி புது விழுமியங்களை உருவாக்க வேண்டும் என்று நிதானமாக கூறினான் அஸ்வத்தாமன்.

புது விழுமியங்களையா.

எதன் அடிப்படையில்.

பூமியில் உள்ள மனிதர்களின் அடிப்படையில்.அவர்களின் உடல் அடிப்படையில்.

ஆனால் அவை நிரந்தரமற்றவை ஆயிற்றே.

இல்லை.மனித உடல்கள் அதன் ஆசைகளும் நிரந்தரமானவை.அதன் அடிப்படையில் புதிய விழுமியங்களை நாம் உருவாக்க வேண்டும்.

இது சாத்தியமா.

சாத்தியம்.

ஏன் அதை விஞ்ஞானத்தின் அடிப்படையில் செய்யக்கூடாது.

செய்யக்கூடாது. இன்று அந்த திசையில்தான் சிலர் முயன்றுகொண்டிருக்கிறார்கள்.ஆனால் விஞ்ஞானம் ஒரு சாத்தான் என்பதே உண்மை.

ராஜன் எதுவும் பேசாமல் சோர்ந்து போய்விட்டான்.